Published : 12 Oct 2021 03:15 AM
Last Updated : 12 Oct 2021 03:15 AM
விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை விரைந்து கிடைக்க புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரை பிரதேச விவசாயிகள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் பி.ராஜேந்திரன் நேற்று கூறியது: காவிரி டெல்டா பகுதியில் கடந்த ஆண்டு சம்பா அறுவடை காலத்தில் பெய்த கனமழையால், பயிர்கள் நீரில் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டது.
பயிர் பாதிப்பை பார்வையிட்ட அப்போதைய முதல்வர், வேளாண்மைத் துறை அமைச்சர் ஆகியோர் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால், காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கான பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ளவில்லை. இதனால், மத்திய, மாநில அரசுகள் காப்பீட்டு நிறுவனத்துக்கு தங்களது பங்களிப்பை வழங்கி, நிறுவனம் காப்பீட்டுத் தொகையை விடுவிக்கச் செய்யவேண்டும் என விவசாயிகள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதேநிலை தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களிலும் ஏற்பட்டது. விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, காப்பீட்டு நிறுவனம், பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால், காரைக்கால் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் புதுச்சேரி முதல்வர், வேளாண்மைத் துறை அமைச்சர், வேளாண் இயக்குநர் ஆகியோர் சிறப்புக் கவனம் செலுத்தி, காரைக்கால் விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு கிடைக்கவேண்டிய பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT