Published : 22 Oct 2021 03:07 AM
Last Updated : 22 Oct 2021 03:07 AM
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல் தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுமதியளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கி, கடந்த செப்டம்பர் 3-ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில், வார்டு கவுன்சிலர்கள் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை பட்டியலின, பழங்குடியின பெண்களுக்கும், பொதுப்பிரிவு பெண்களுக்கும் ஒதுக்கி, அக்டோபர் 12-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதை எதிர்த்து, நெமிலி ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற மனோகரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது நெமிலி ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கியுள்ளதாகவும், இது தொடர்பாக புதிய அறிவிப்பு அக்.22 (இன்று) வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக ஒரு வாரத்துக்கு முன்பாக உரிய முன்னறிவிப்பு நோட்டீஸ் கொடுத்து புதிதாக அறிவிப்பை வெளியிடலாம் என அனுமதியளித்து வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT