Published : 25 Jun 2021 03:13 AM
Last Updated : 25 Jun 2021 03:13 AM

அரசுப் பணியை சேவையாக கருதி செயல்பட ஆட்சியர் அறிவுரை :

பொதுமக்களுக்கு சான்றிதழ்களை அலட்சியப்படுத்தாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தலைமையில் நடந்தது. பொதுமக்களிடம் இருந்து இணையதளம் மூலம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்து உரிய சான்றிதழ்களை 18 பேருக்கு ஆட்சியர் வழங்கினார். அப்போது ஆட்சியர் பேசியதாவது:

ஜமாபந்தியில் அளிக்கும் மனுக்களுக்கு தீர்வு ஏற்படும் வகையில் அரசு அலுவலர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தகுதியுடைய மனுதாரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி ஜமாபந்தியில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் தமது அன்றாட பணிகளில் பொதுமக்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகளையும், அரசின் திட்டங்களை முழுமையாக கொண்டு சேர்க்கும் பணிகளையும் மேற் கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் என்பது உயிர்நாடியாக உள்ளது. அதை அலட்சியப்படுத்தாமல் அவர்களுக்கு கிடைக்கச் செய்வதுகிராம நிர்வாக அலுவலர்களின் கடமை.

அரசு ஊழியர்கள் பொது மக்களாக இருந்து அவர்களின் சிரமங்களை கருத்தில் கொள்ள வேண்டும். பணியாக மட்டும் கருதாமல் சேவையாக நினைத்து செயல்பட வேண்டும். தருமபுரி மாவட்டத்திற்கு சிறந்த பெயர் கிடைக்கும் வகையில் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும். தகுதியுடைய பயனாளிகள் அனைவருக்கும் அரசின் திட்டங்கள், பயன்கள் சென்றுசேர அனைத்துத்துறை அலுவலர்கள் தனது பணியை துரிதமாக சிறப்பாக செய்திட வேண்டும். பொதுமக்கள் ஆன்லைன் மூலம் வருகிற ஜூலை மாதம் 31-ம் தேதி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு ஆட்சியர் பேசினார்.

இந்நிகழ்வில் பாலக்கோடு வட்டாட்சியர் அசோக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x