Published : 19 Jun 2021 03:14 AM
Last Updated : 19 Jun 2021 03:14 AM
கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் தொடர் மழையால் ஏலச்செடிகள் சேதமடைந்து வருகின்றன. இவற்றை பராமரித்துப் பாதுகாக்க தமிழகத் தோட்டத் தொழிலாளர்களை இடுக்கி வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட் டத்தில் அதிக அளவில் ஏலக்காய் சாகுபடி நடைபெறுகிறது. ஜூலையில் ஏலக்காய் அறுவடை பருவமாகும். இதையொட்டி ஏப்ரல், மே, ஜூனில் பராமரிப்புப் பணி நடைபெறும். இதற்காக தேனி மாவட்ட தோட்டத் தொழிலாளர்கள் அங்கு சென்று வருவர். தற்போது ஊரடங்கு என்பதால் கேரளப் பகுதிக்குச் செல்ல முடியவில்லை. தற்போது இடுக்கி பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் ஏலச் செடிகள் ஒடிந்து விழுகின்றன. அதிக தண்ணீர் தேங்கியதால் தூர்ப்பகுதி அழுகத் தொடங்கியுள்ளது. எனவே, இடுக்கி, தேனி மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசித்து தமிழகத் தொழிலாளர்களை தோட்டப்பணிக்கு அனுமதிக்க வேண்டும் என்று ஏல சாகுபடி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் தோட்டம் வைத்துள்ள கம்பம் விவசாயி செந்தில்குமார் கூறுகையில், வேர் அழுகலை தடுக்க சுண்ணாம்பு உள்ளிட்டவற்றை இட்டு நீர்த்தன்மையைக் குறைப்போம். தொழிலாளர்கள் பணிக்கு வந்தால்தான் ஏலச்செடியை முறையாக பராமரிக்க முடியும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT