Published : 06 Jun 2021 03:14 AM
Last Updated : 06 Jun 2021 03:14 AM
மயிலாடுதுறையில் 4 ஆண்டு களுக்கு முன்பு பள்ளியில் படித்தபோது, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் மீது கல்லூரி மாணவி ஒருவர் தற்போது போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து அந்த உடற்கல்வி ஆசிரியர் நேற்று கைது செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை மகாதானத் தெருவில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் அண்ணாதுரை(50). இந்தப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் படித்து வந்த ஒரு மாணவி, தற்போது கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், அந்த மாணவி மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி-க்கு நேற்று முன்தினம் ஆன்லைன் வழியாக ஒரு புகார் மனு அனுப்பியுள்ளார். அதில், கடந்த 2017-ம் ஆண்டு தான் பள்ளியில் படித்தபோது, அங்கு பணியாற்றிய உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்காக, அவரது வீட்டுக்கு தன்னை வரச்சொல்லி, அங்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸார், அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர்கள் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறித்து செய்தித்தாள்களில் படித்து தெரிந்துகொண்டதாகவும், இதனால் தன்னை தைரியப்படுத்திக்கொண்டு, தனக்கு முன்பு நிகழ்ந்த பாலியல் தொல்லை குறித்து தற்போது போலீஸில் புகார் அளித்ததாகவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மகளிர் காவல் நிலைய போலீஸார் நேற்று போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரையை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT