Published : 24 Apr 2021 03:15 AM
Last Updated : 24 Apr 2021 03:15 AM

சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் - தோண்டி எடுக்கப்பட்ட சிசுக்களின் சடலங்கள் : பெற்றோர் குறித்து போலீஸார் விசாரணை

அரியலூர்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சுண்ணாம்புக்கல் சுரங்கத் தில் புதைக்கப்பட்ட இரட்டை சிசுக்களின் உடல்கள் நேற்று பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டன.

செந்துறையை அடுத்த ஆதனக்குறிச்சி கிராமத்தில் உள்ள தனியார் சிமென்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில், குறை பிரசவத்தில் பிறந்த ஆண், பெண் என இரட்டை சிசுக்களின் சடலங்கள் ரத்தக் கறைகளுடன் நேற்று முன் தினம் கிடந்துள்ளன.

இதைப் பார்த்த அப்பகுதியில் கால்நடை மேய்த்துக் கொண்டிருந்த சிலர், சிசுக்களின் உடல்களை நாய்கள் எடுத்துச் செல்லாமல் இருக்க, அப்பகுதி யில் சிறிதளவு குழி தோண்டி சிசுக்களின் உடல்களை புதைத்து, மேல் பகுதியில் முட்கள், கற்களை வைத்துச் சென்றுள்ளனர். தகவலறிந்த ஆதனக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் ராயர், இதுகுறித்து தளவாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், செந்துறை வட்டாட்சியர் குமரய்யாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் புதைக்கப்பட்ட சிசுக்களின் சடலங்கள் நேற்று மதியம் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காகவும், அங்க அடையாளங்களை சேகரிக்கவும் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும், சிசுக்களின் பெற்றோர் யார்? எப்படி சிசுக்களின் சடலங்கள் இங்கு வந்தன என்பது குறித்து தளவாய் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x