Published : 25 Feb 2021 03:16 AM
Last Updated : 25 Feb 2021 03:16 AM

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக் கொடை விழா 28-ல் தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக் கொடை விழா வரும் 28-ம் தேதி தொடங்கி, மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.

28-ம் தேதி காலை 7.30 மணியில் இருந்து 8.30 மணிக்குள் திருக்கொடி ஏற்றப்படுகிறது. அதைத்தொடர்ந்து நடைபெறும் சமய மாநாட்டை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். மதியம் 12.30 மணிக்கு உச்சிகால பூஜை, இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு அத்தாள பூஜை நடைபெறுகிறது.

2-ம் நாள் விழாவான மார்ச் 1-ம் தேதி காலை 10 மணிக்கு மகாபாரத தொடர் சொற்பொழிவு, இரவு 8 மணிக்கு இன்னிசை நடைபெறுகிறது.

3-ம் நாள் திருவிழாவான 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை காலை 9.30 மணி, இரவு 9.30 மணி ஆகிய வேளைகளில் பகவதியம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, மாலை 5 மணிக்கு பரத நாட்டியம், இரவு 9 மணிக்கு கதகளி ஆகியவை நடைபெறுகிறது.

மார்ச் 8-ம் தேதி இரவு 9.30 மணிக்கு பெரிய சக்கர தீவட்டியுடன் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி நடைபெறுகிறது.

விழா நிறைவு நாளான 9-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு கண்டன் சாஸ்தா கோயிலில் இருந்து களப பவனி, 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி ஆகியவை நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு குத்தியோட்டம், நள்ளிரவு 12 மணிக்கு பாரம்பரிய ஒடுக்கு பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x