Published : 09 Jan 2021 03:12 AM
Last Updated : 09 Jan 2021 03:12 AM

‘மு.க. ஸ்டாலினின் அனுமதி பெற்று கலசப்பாக்கம் தொகுதியில் திமுக போட்டியிடும்’

திருவண்ணாமலை: கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக போட்டியிடும் என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட படைவீடு ஊராட்சியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, “கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி கடந்த 10 ஆண்டுகளாக முன்னேற்றம் இல்லாமல் உள்ளது. அதிமுகவைச் சேர்ந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் தலா 5 ஆண்டுகள் பதவியில் இருந்தும் எதுவும் செய்யவில்லை. திமுக ஆட்சியில் செண்பகத்தோப்பு அணை உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. திமுக ஆட்சி என்றால் விவசாயிகளின் ஆட்சி என்றே கூறலாம். கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்தது திமுக. மேலும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது. ஆனால், விவசாயிகளுக்கு எதிராக பாஜக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை அதிமுக அரசு ஆதரித்துள்ளது.

அம்மாவின் (ஜெயலலிதா) வழியில் ஆட்சி நடத்துகிறோம் என முதல்வர் பழனிசாமி கூறி வருகிறார். ஆனால், ஜெயலலிதா எதிர்த்த ‘நீட்' தேர்வு மற்றும் புதிய மின்சார மசோதா போன்ற திட்டங்களை முதல்வர் பழனிசாமி ஆதரித்துள்ளார். இதுதான், அவர்கள் செய்த சாதனை. கலசப்பாக்கம் தொகுதி முன்னேற்றம் அடைய, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் பேசி, இந்த தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அனுமதி பெறப்படும். ஒன்றிய நிர்வாகிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்டவர்கள் பிரச்சாரத்தை தொடங்குங்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என உறுதியாக எடுத்துரைத்து பிரச்சாரம் செய்யுங்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x