Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

அரியலூர் மாவட்டத்தில் - போர்க்கால அடிப்படையில்சிறப்பு சிகிச்சை மையங்கள் : மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தகவல்

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திடீர்குப்பம் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி, ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் கழுவந்தோண்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளிட்டவற்றில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் த.ரத்னா முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ரமேஷ் சந்த் மீனா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, ரமேஷ் சந்த் மீனா தெரிவித்தது: அரியலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போர்க்கால அடிப்படையில் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார். மேலும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய கட்டிடத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை அமைக்க அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது எம்எல்ஏ க.சொ.க.கண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், கோட்டாட்சியர்கள் ஏழுமலை, அமர்நாத், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் திருமால், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x