Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 03:11 AM
கோவை மாவட்டத்துக்கான ஆக்சிஜன் அளவை அதிகரிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், "தமிழகத்துக்கு தேவையான ஆக்சிஜன் உற்பத்தி தூத்துக்குடி ஸ்டெர்லைட் மூலமாக கிடைப்பதற்கு காலதாமதம் ஆவதாக அறிந்தேன். ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்வதற்கு என்ன உதவிகள் வேண்டுமோ அதை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு செய்ய வேண்டும்.
மத்திய அரசின் தொகுப்பிலிருந்து இப்போது கிடைத்துக் கொண்டிருக்கும் ஆக்சிஜன் அளவை இன்னும் பத்து நாட்களுக்கு தொடர வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு உடனடியாக ஆக்சிஜன் விநியோகம் தேவைப்படுவதால் கோவைக்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் அளவை தமிழக அரசு அதிகரிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்திய மருத்துவ சங்க (ஐஎம்ஏ) கோவை கிளை தலைவர் ராஜேஷ்பாபு தனக்கு அனுப்பிய கடிதத்தையும் வானதி சீனிவாசன் இணைத்துள்ளார். அதில், “கோவையில் உள்ள மருத்துவமனைகளில் தினமும் சராசரியாக 2 ஆயிரம் நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இதில், 50 சதவீதம் பேருக்கு செயற்கை ஆக்சிஜன் தேவைப்படுகிறது. தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது கடினமாக உள்ளது.
போதிய அளவு ஆக்சிஜன் கிடைத்தால் இன்னும் பல உயிர்களை காப்பாற்ற முடியும். எனவே, இந்த இக்கட்டான காலத்தில்போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்க உதவ வேண்டும்” என்று ராஜேஷ்பாபு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT