Published : 07 Jan 2021 03:15 AM
Last Updated : 07 Jan 2021 03:15 AM

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மத்திய அரசுப் பணி தேர்வுக்கு இலவசப் பயிற்சி

கோவை: மத்திய அரசு ஊழியர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) சார்பில், ஒருங்கிணைந்த மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள உதவி கணக்கு அலுவலர், உதவி தணிக்கை அலுவலர், உதவி அலுவலர், வருமான வரி ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 32 விதமான பணியிடங்கள், தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.

இத்தேர்வில் 18 முதல் 32 வயதுக்கு உட்பட்ட, பட்டப் படிப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம். இதற்கு விண்ணப்பிக்க வரும் 30-ம் தேதி கடைசி நாள். விண்ணப்பக் கட்டணம் ரூ.100. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. வரும் மே 29-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை இணையவழியில் தேர்வு நடைபெறுகிறது.

இந்த தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை துணை இயக்குநர் ஆ.ஜோதிமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வப் பயிலும் வட்டம் சார்பில், இணையவழியில் இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வகுப்புகள், பாடக் குறிப்புகள், குழு விவாதங்கள் போன்றவை இணையவழியில் நடைபெறும். வாரந்தோறும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x