Published : 06 Jan 2021 03:15 AM
Last Updated : 06 Jan 2021 03:15 AM

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் வெளிமாநிலத்துக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணி யம்பாடி, நாட்றாம்பள்ளி மற்றும் ஜோலார்பேட்டை பகுதிகளில் இருந்து ரயில் மற்றும் சரக்கு வாகனங்களில் அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. அதன்பேரில், காவல் துறையினர், வருவாய் துறையினர் மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை பலப் படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என எஸ்பி டாக்டர் விஜயகுமார் காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்படி, ஜோலார்பேட்டை ரயில்வே பாதுகாப்புப்படை மற்றும் ரயில்வே காவல் துறையினர் ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என்பது குறித்து கடந்த சில நாட்களாக கண்காணித்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு ரயில்வே பாதுகாப்புப்படை ஆய்வாளர் செந்தில்ராஜ் தலைமையிலான காவல் துறையினர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடைமேடைகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ரயில் நிலையம் அருகாமையில், தண்டவாளத்தின் அருகே முட்புதரில் மூட்டைகளில் ரேஷன் அரிசி மறைத்து வைக்கப் பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கேட்பாரின்றி கிடந்த 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த பாதுகாப்புப் படையினர் அவற்றை திருப்பத்தூர் நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ஒப்படைத்தனர்.

மேலும், இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அரிசி கடத்தலில் தொடர்புடைய நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x