Published : 08 Dec 2020 03:14 AM
Last Updated : 08 Dec 2020 03:14 AM

அமைச்சர்கள் யாரும் மழையில் வெளியே வரவே இல்லை புயல் பாதிப்பு தொடர்பாக புதுச்சேரி அரசு கணக்கெடுப்பே நடத்தவில்லை கூட்டணிக் கட்சியான திமுக கடும் குற்றச்சாட்டு

புயல் பாதிப்பு தொடர்பாக புதுச் சேரி அரசு கணக்கெடுப்பே நடத்த வில்லை; அமைச்சர்கள் மழையில் வெளியே வரவே இல்லை என்று கூட்டணிக்கட்சி திமுக கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசின் கூட்டணிக் கட்சியானதிமுக, ஆளும் அரசை தற்போது கடுமையாக தொடர்ந்து விமர்சித்து வருகிறது.

இந்நிலையில் திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ வெளியிட்டிருக்கும் அறிக்கையில் அரசை கடுமையாக சாடியி ருக்கிறார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அனைத்து குடும்பங்களுக்கும்

ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்குக

“உடனடியாக மீனவர்களுக்கும், சேதமான கட்டிடங்களுக்கும், நீர் புகுந்த வீடுகளுக்கும் தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். இந்த அரசின் பதவிக்காலம் முடிவடையும் நிலைக்கு வந்துள்ளது. ஆனால் இதுவரை ஒருமுறைகூட இயற்கை சீற்றங்களால் பாதிப்பிற்குள்ளான புதுச்சேரி மக்களுக்கு இந்த அரசால் நிவாரணம் வழங்கப்படவில்லை” என்றும் சிவா எம்எல்ஏ தனது அறிக்கையில் கூறியிருக்கிறார். புதுச்சேரியில் புயல், மழையால் அனைத்து தரப்பு மக்களும்கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளனர். இதுவரை அரசு சார்பில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து எந்தவிதமான கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை. விவசாய பயிர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்திற்கான பிரிமியம் முழுவதையும் அரசே செலுத்தும் என்று முதல்வரால் கடந்தாண்டு அறிவிக்கப் பட்டது. அத்தொகை செலுத்தவில்லை. இந்த ஆண்டிற்கான காப்பீடு பிரிமியம் செலுத்துவதற்கான காலம் கடந்த மாதம் 25-ம் தேதி அதாவது, ‘நிவர்’ புயலுக்கு முன்பே முடிந்து விட்டது. இதனால் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்குமா என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வருவாய்த்துறை அமைச்சர், உள்ளாட்சித்துறை அமைச்சர் உள்ளிட்ட எந்த அமைச்சர்களும் புயல் மற்றும் மழையின்போது வெளியே வர வில்லை. சில அமைச்சர்கள், சிலநேரங்களில் தங்கள் தொகுதிகளைத் தாண்டி வெளியே வரவில்லை. அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் புயல் மற்றும் மழை யால் புதுச்சேரி முழுக்க பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டு நிவாரணப்பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். சேத விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று முதல்வரும் உத்தரவு பிறப்பிக்கவில்லை. இதனால் புதுச்சேரியில் புயல் மற்றும் கனமழையால் சேதமான பயிர்கள், மீன்பிடி தளங்கள், மின்சார பொருட்கள், சாலைகள் உள்ளிட்ட எவைகள் குறித்தும் கணக்கு ஏதும் இல்லை.

இந்நிலையில் நேற்று மத்தியகுழுவினர் புதுச்சேரி வந்து பார்வையிட்டுள்ளனர். அவர்களிடம் எந்தசேத விவரத்தை புதுச்சேரி அதிகாரிகள் புள்ளி விவரங்களுடன் விளக்கியிருக்க முடியும்? உரிய விவரத்தை அளித்தால்தானே மத்திய அரசிடம் இருந்து நிவாரணத்தை கேட்டு வலியுறுத்த முடியும். எனவே மத்திய குழுவிடம் சேத விவத்தை தெரிவித்து நிவாரணம் பெறும் நடவடிக்கையிலும் இந்த அரசு தவறிவிட்டதாகவே தெரிகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x