Published : 27 Mar 2021 03:14 AM
Last Updated : 27 Mar 2021 03:14 AM

முழு அடைப்புப் போராட்டம் - பஞ்சாப், ஹரியாணாவில் சாலை, ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் : போக்குவரத்து கடும் பாதிப்பு

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் உள்ள காஜிபூர், திக்ரி, சிங்கு ஆகிய எல்லைகளில் கடந்த நவம்பர் 26-ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதில் பங்கேற் றுள்ளனர்.

போராட்டம் தொடங்கி மார்ச் 26-ம் தேதியுடன் (நேற்று) 4 மாதங்கள் நிறைவடைவதை ஒட்டி, விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டம் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. எனினும், பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் மட் டுமே இதன் தாக்கத்தை காண முடிந்தது. டெல்லி உட்பட மற்ற மாநிலங்களில் இப்போராட்டத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இப்போராட்டத்தை ஒட்டி பஞ்சாப், ஹரியாணாவில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட் டிருந்தன. திரை யரங்குகள், வணிக வளாகங்களும் மூடப்பட்டிருந்தன. மேலும், பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் சாலை, ரயில் மறியல் போராட்டங்களிலும் விவசாயிகள் ஈடுபட்டனர். பஞ்சாபில் அமிர்தசரஸ், லூதியானா, பாட்டியாலா, மொஹாலி, பிரோஸ்பூர் ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஹரியாணாவின் ரோத்தக்,ஜஜ்ஜார், அம்பாலா, ஜிந்த், பஞ்ச்குலா உள்ளிட்ட மாவட்டங்களிலும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். இதன்காரணமாக, இந்த இரு மாநிலங்களிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, பல்வேறு நெடுஞ்சாலைகளையும் விவசாயிகள் முற்றுகையிட்டதால், டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு செல்வோரும் அவதிக்குள்ளாகினர். பெரும்பாலான நெடுஞ்சாலைகளில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பல மணிநேரம் ஸ்தம்பித்து நின்றன.

இது ஒருபுறம் இருக்க, பஞ்சாப், ஹரியாணாவில் முக்கிய ரயில் நிலையங்களிலும் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பல ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக, ஆயிரக்கணக்கான ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

பஞ்சாப், ஹரியாணாவை தவிர, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் சாலை, ரயில்மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. மாலை 6 மணியுடன் போராட்டம் நிறைவடைந்ததை அடுத்து,போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பியது. இப்போராட்டத்தில் எவ்வித அசம்பாவித சம்பவமும் நிகழவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x