Published : 14 Dec 2020 03:14 AM
Last Updated : 14 Dec 2020 03:14 AM
நாடாளுமன்றம் மீதான கோழத்தனமான தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தின் மீது பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்புப் படை வீரர்கள் 8 பேர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 5 தீவிரவாதிகளும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்தது.
இந்நிலையில் நாடாளுமன்ற தாக்குதலின் 19-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த 9 பேரின் படங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பிரதமர் மோடி விடுத்துள்ள செய்தியில் ‘‘2001-ல் இதே நாளில் நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமாக தாக்குதலை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். நாடாளுமன்றத்தை பாதுகாப்பதில் தங்கள் உயிரை இழந்தவர்களின் வீரம் மற்றும் தியாகத்தை இந்த நாளில் நினைவுகூர்கிறோம். இந்தியா எக்காலத்திலும் அவர்களுக்கு நன்றி செலுத்தி வரும்” என்று கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் விடுத்துள்ள செய்தியில் “நாடாளுமன்றத்தை பாதுகாப்பதில் தங்கள் உயிரை இழந்த வீரத் தியாகிகளை இந்த நாடு நன்றியுடன் நினைவு கூர்கிறது. நமது ஜனநாயக் கோயிலை பாதுகாத்தவர்களின் பெரும் தியாகத்தை நாம் நினைவுகூரும் அதேவேளையில் பயங்கரவாத சக்திகளை தோற்கடிப்பதற்கான நமது தீர்மானத்தை பலப்படுத்துவோம்” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT