Published : 12 Dec 2020 03:16 AM
Last Updated : 12 Dec 2020 03:16 AM
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தியை மாற்றும் முயற்சி எதுவும் நடைபெறவில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணியில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் சரத் பவார் அண்மையில் அளித்த பேட்டியில், “காங்கிரஸ் தலைவராக ராகுல் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் விரும்புகின்றனர். என்றாலும் அவரது தலைமையில் சில பிரச் சினைகள் உள்ளன. அவரிடம் உறுதியான நிலைப்பாடு இல்லை” என்றார்.
இதையடுத்து, சரத் பவாரை ஐ.மு.கூட்டணி தலைவர் பதவியை ஏற்கும்படி காங்கிரஸ் அல்லாத கட்சிகள் கேட்டுக்கொள்ள வாய்ப் புள்ளதாக தகவல் வெளியானது. காங்கிரஸ் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உட்கட்சி தேர்தல்ஏற்பாடுகளை அக்கட்சி முடுக்கிவிட்டுள்ள நிலையில் இவ்வாறு தகவல் வெளியானது.
இதுகுறித்து காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் தாரிக்அன்வர் கூறும்போது, “ஐ.மு.கூட்டணி தலைவராக சரத்பவார் பொறுப்பேற்க உள்ளதாக கூறப் படுவதில் உண்மையில்லை. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை குலைக்கவும் விவசாயிகள் போராட்டம் போன்ற நாட்டின் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவும் இதுபோன்ற வதந்தி பரப்பப்படுகிறது.
கூட்டணியின் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார். அவரை மாற்றும் முயற்சி எதுவும் நடைபெறவில்லை. கூட்டணியில் காங்கிரஸ் மிகப் பெரிய கட்சியாக உள்ளது. எனவே ஐ.மு.கூ. தலைவர் பதவியை காங்கிரஸ் வகிப்பது இயற்கையானதே” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT