Published : 27 Oct 2021 03:07 AM
Last Updated : 27 Oct 2021 03:07 AM

தீபாவளிக்குப்பின் தொற்று உயராமல் இருக்க - தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

சென்னை

தீபாவளிக்குப்பின் தமிழகத்தில் கரோனா தொற்று உயராமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், உரிய நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் ஸ்டாலினுக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. இதனால், சில கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், எந்த கட்டுப்பாடுகளையும் பின்பற்றாத சூழலே பெரும்பாலான இடங்களில் நிலவுகிறது என்பதுதான் எதார்த்தமான நிலையாகும். ஜவுளி, இனிப்பு, பட்டாசுக் கடைகளில் கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படாதது மிகவும் வருத்தமாக உள்ளது.

இதுபோன்ற நிலைமை கரோனா தொற்றின் தாக்கத்தை அதிகரிக்க வழிவகுத்துவிடும். எனவே பாதுகாப்பு முறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டியதும், பண்டிகைக் காலங்களில் மிகுந்தகவனத்துடன் இருக்க வேண்டியதும் மிக மிக அவசியம். கட்டுப்பாடுகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே பரப்பவும், ஒரே இடத்தில் பலர் கூடுவதைத் தவிர்க்கவும், பண்டிகைக்குப் பிறகு கரோனா தொற்றின் தாக்கம் உயராமல் இருக்கவும் நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.

எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துச் செல்ல, தேவையான அறிவுரைகளை வழங்கும்படி தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x