Published : 27 Jun 2021 03:12 AM
Last Updated : 27 Jun 2021 03:12 AM

மாணவர்கள் நீட்தேர்வில் பங்கேற்பதா? வேண்டாமா? - அரசு தெளிவுபடுத்த வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தல்

நீட் தேர்வில் பங்கேற்பதா? வேண்டாமா என்பது குறித்து மாணவர்களுக்கு தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

சட்டப்பேரவை தேர்தலில், திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தில், தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றதும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மாணவர்களுக்கு வாக்குறுதி அளித்தது.

காங்கிரஸ் - திமுக கூட்டணிஆட்சியில் 2010-ல் கொண்டுவரப்பட்ட நீட் நுழைவுத்தேர்வு தமிழக மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; அதை திணிக்கக் கூடாதுஎன்பதுதான் அதிமுக அரசின் நிலைப்பாடாக இருந்தது. இதற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்றுபோராடி விலக்கும் பெற்றது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்யப்பட்டுநாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் என்று உத்தரவிடப்பட்டது.

நீட் தேர்வை அதிமுக அரசு கடுமையாக எதிர்த்தபோதும், தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவ,மாணவியரை நீட் தேர்வுக்கு தயார்படுத்தும் பணியையும், அதற்கு ஏற்றார்போல் பாடத்திட்டங்களை மாற்றி அமைத்ததுடன், மாவட்டம்தோறும் நீட் தேர்வுக்காக அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது.

மேலும், அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவு மருத்துவக்கல்லூரிகளில் சேர வேண்டும் என்பதற்காக 7.5 சதவீதம் இடஒதுக்கீடும் கொண்டுவரப்பட்டது. இதனால் 435 மாணவர்கள் மருத்துவ படிப்பில்சேர்ந்து படித்து வருகின்றனர்.

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று மாணவர்களுக்கு வாக்குறுதி அளித்தீர்களே? என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்று கேட்டதற்கு, நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் நீட் தேர்வின் பின் விளைவுகளை அறிவதற்கு கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. கமிஷன் பரிந்துரைகள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பதிலளித்தார்.

தற்போதைய அரசின் இந்த முடிவால், நடப்பாண்டு நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெறுமா, நடைபெறாதா? நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டுமா, வேண்டாமா? என்ற குழப்பம் மாணவர்கள், பெற்றோர் மத்தியில் நீடிக்கிறது.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி, இந்த ஆண்டு மத்திய அரசு நீட் தேர்வை நாடு முழுவதும் நடத்தியே தீரும் என்று அகில இந்திய மருத்துவக் கல்விக் கழகம் அறிவித்துள்ளது. எனவே, தமிழக அரசு நியமித்துள்ள நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான கமிஷன் பரிந்துரைகள் வருவதற்கு முன், தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பதா? வேண்டாமா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x