Published : 05 Feb 2021 03:16 AM
Last Updated : 05 Feb 2021 03:16 AM

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் பிப்.10-ம் தேதி வருகை சென்னையில் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார்

சென்னை

சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர்சுனில் அரோரா தலைமையில் ஆணையர்கள், அதிகாரிகள் குழுவினர் பிப்.10-ம் தேதி சென்னை வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல்அல்லது மே மாதத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையிலான தேர்தல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இப்பணிகளை, மத்திய தேர்தல் ஆணையமும் கண்காணித்து வருகிறது.

தேர்தல் ஆணைய பொதுச்செயலர் உமேஷ் சின்கா தலைமையிலான உயர்நிலைக் குழுவினர், கடந்த டிசம்பரில் சென்னை வந்தனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்துஅவர்களின் கருத்துகளை கேட்டறிந்தனர். அதைத் தொடர்ந்து,மாவட்ட தேர்தல் அதிகாரிகள்,காவல்துறை கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலர் மற்றும் தமிழக அரசுத் துறை அதிகாரிகள், வருமானவரி, அமலாக்கத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினர். அப்போது, ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடிஎன்ற வகையில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கான வசதிகளை செய்து தரவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல்முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணைய குழுவினர் சென்னை வர உள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமார் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் பிப்.10-ம் தேதி சென்னை வருகின்றனர்.

இரண்டு நாட்கள் சென்னையில் இருக்கும் அவர்கள், சட்டப்பேரவைதேர்தல் பணிகள், முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்கின்றனர். அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். அதன்பின் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் மாவட்டம், தொகுதி வாரியாக தேர்தல் ஏற்பாடுகளை கேட்டறிகின்றனர். தலைமைச் செயலர், பல்வேறு துறைகளின் செயலர்கள், வருமானவரி, சுங்கத் துறை, வருவாய் புலனாய்வு பிரிவு, கலால் துறை, அமலாக்கத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துகின்றனர்.

தமிழகத்தில் ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்டு, புதுச்சேரிக்கும் அதன்பின் கேரளாவுக்கும் தேர்தல் ஆணைய குழுவினர் செல்ல உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x