Published : 22 Aug 2021 03:12 AM
Last Updated : 22 Aug 2021 03:12 AM

காபூல் விமான நிலைய சுற்றுச் சுவர் மீதிருந்தபடி - குழந்தையை தூக்கிய அமெரிக்க வீரர் :

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து, அங்கு நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக வெளியாகி வரும் வீடியோ காட்சிகள் மனதை உலுக்குவதாக உள்ளன.

அந்த வகையில் இப்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில், காபூல் நகரில் உள்ள ஹமீது கர்சாய் சர்வதேச விமான நிலையத்தின் சுற்றுச் சுவரின் உச்சியில் உள்ள கம்பி வேலிக்கு நடுவே நிற்கும் அமெரிக்க கடற்படை வீரர் ஒருவரிடம் வெளிப்புறம் கூடியுள்ள பொதுமக்களில் ஒருவர் தனது குழந்தையை கொடுக்கிறார். அவர் அந்தக் குழந்தையை கம்பி வேலியில் சிக்காதவாறு ஒரே கையில் லாவகமாக தூக்கிக் கொள்கிறார். அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள இந்த வீடியோ உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் கூறும்போது, “காபூல் விமான நிலையத்துக்கு வெளியே கூடியிருந்த பொதுமக்களில் ஒருவர் தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றும் சிகிச்சைக்கு உதவுமாறும் கோரியுள்ளார்.

காபூல் விமான நிலையத்தில் உள்ள அமெரிக்க வீரர்கள் சுற்றுச் சுவர் மீது ஏறி அந்தக் குழந்தையை வாங்கி உள்ளனர். விமான நிலைய வளாகத்தில் உள்ள நார்வேமருத்துவமனையில் அந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்” என்றார். -ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x