Published : 12 Feb 2021 03:16 AM
Last Updated : 12 Feb 2021 03:16 AM

இந்திய விதிகளை மீறும் சமூக வலைதள நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை

புதுடெல்லி

விதிகளை மீறி செயல்படும் சமூக வலைதள நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் ட்விட்டர் நிறுவனம் மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கேற்ப சில கணக்குகளை முடக்கியது. இந்நிலையில் இது தொடர்பாக நேற்றுமாநிலங்களவையில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:

வன்முறை, போராட்டங்களைத் தூண்டும் வகையிலான கருத்துகளை வெளியிட அனுமதிக்கும் சமூக வலைதளநிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஎச்சரித்தார். செய்தி மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை ஒருபோதும் அரசு கட்டுப்படுத்தியதில்லை. அதேபோல தனி மனித சுதந்திரமும் இங்கு ஒடுக்கப்பட்டது கிடையாது. அதேசமயம் கருத்துகள் நாட்டின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்குக் குந்தகம்ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது என்றார்.

``தவறான தகவல்களை வெளியிட்டு வன்மத்தை பரப்பாதீர்கள். இந்திய இறையாண்மைக்கும், இந்த மண்ணிற்கேற்ப வடிவமைக்கப்பட்ட சட்டத்துக்கும் மதிப்பளிக்கும் வகையில் செயல்படுங்கள்'' என்று நிறுவனங்களைக் கேட்டுக் கொண்ட அவர், இதிலிருந்து மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்றார்.

கடந்த புதன்கிழமை ட்விட்டர் செயல்பாடு குறித்து தனது அமைச்சகம் கடும் அதிருப்தியை நிறுவனத்துக்குத் தெரிவித்தது. அதில் பதிவேற்றப்பட்டிருந்த 1,100 கணக்குகளில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகக் கூறப்பட்டது. இந்த கணக்குகள் மூலம்தான் விவசாய போராட்டத்தில் தவறான தகவல் பரப்பக் காரணமாக அமைந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்திருந்தது.

வாஷிங்டன் நகரில் வன்முறை வெடித்தபோது சமூக வலைதளங்கள் தங்களுக்குரிய பொறுப்பை உணர்ந்து செயல்பட்டன. ஆனால் குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையை நோக்கி விவசாயிகள் நடத்திய போராட்டம் பெரிதாக பரப்பப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

இதுபோன்ற இரட்டை நிலைப்பாட்டை நிறுவனங்கள் மேற்கொள்வது ஏற்றுக் கொள்ளத் தக்க வகையில் இல்லை என்றும், விவசாயிகளை கூண்டோடு கொல்ல மோடி முயல்வதாக கருத்துகள் பரப்பப்பட்டது சரியான தகவல் அல்ல என்றும் குறிப்பிட்டார்.

இந்திய சட்டப் பிரிவு 19(2) தனி மனித பேச்சுரிமையை உறுதி செய்கிறது. ஆனாலும் அதில் சில வரைமுறைகள் உள்ளன. இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் பேச்சு இருக்கக் கூடாது என்றார்.

ட்விட்டர் கணக்குகளில் பாதிக்கும் மேலானவை அரசை விமர்சிக்கும் கருத்துகளை வெளியிடுபவையாக உள்ளதையும் அவர்சுட்டிக்காட்டினார். சமூக வலைதளங்களுக்கான வழிகாட்டு நெறிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அது முழுமையடைந்தவுடன் அதுகுறித்து நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x