Published : 23 Nov 2021 03:09 AM
Last Updated : 23 Nov 2021 03:09 AM

ஆடு திருடர்களால் கொலை செய்யப்பட்ட - எஸ்.ஐ குடும்பத்தினருக்குஅமைச்சர் கே.என்.நேரு ஆறுதல் :

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பூமிநாதன், நேற்று முன்தினம் அதிகாலை புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியிலுள்ள பள்ளத்துப்பட்டி அருகே ஆடு திருடும் கும்பலால் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் அன்று மாலை திருவெறும்பூர் அருகேயுள்ள சோழமாதேவி கிராமத்தில் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு நேற்று சோழமாதேவி கிராமத்தில் உள்ள பூமிநாதன் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் பூமிநாதன் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் சென்றனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு நேற்று பூமிநாதன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதேபோன்று மதிமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம் தலைமையில் மதிமுக நிர்வாகிகள் பூமிநாதன் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொலைபேசியில் பூமிநாதனின் மனைவி கவிதா, மகன் குகன்பிரசாத் ஆகியோரிடம் ஆறுதல் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x