Published : 02 Oct 2021 06:40 AM
Last Updated : 02 Oct 2021 06:40 AM

மசினகுடி அருகே மேலும் ஒருவர் புலி தாக்கி உயிரிழப்பு - ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு :

கூடலூரில் 7 நாட்களாக வனத்துறையினரின் பிடியில் சிக்காமல் இருந்த ஆட்கொல்லி புலி, நேற்றுமசினகுடி அருகே சிங்காரா வனப்பகுதியில் முதியவரை கொன்றது. புலியை சுட்டுக்கொல்ல முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா, தேவர்சோலை பேரூராட்சியில் உள்ள தேவன் எஸ்டேட்டில் கடந்த 23-ம் தேதி மாடு மேய்த்துக் கொண்டிருந்த சந்திரன் என்பவரை புலி தாக்கிக் கொன்றது. மக்கள் நடத்திய போராட்டங்களுக்குப் பிறகு வனத்துறையினர் புலியைத் தேடி வந்தனர். கடந்த 26-ம் தேதி மாலை மேபீல்டுஸ் எஸ்டேட் பகுதியில் இருந்த ஒரு மாட்டை புலி தாக்கிக் கொன்றது.

இந்நிலையில், தேவன் எஸ்டேட் பகுதிக்குள் மீண்டும் புலி நடமாடுவதை கண்டறிந்த கண்காணிப்புக் குழுவினர், அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். புலிக்கு மயக்க ஊசி செலுத்தி, அதை வனப்பகுதிக்குள் கொண்டு செல்வதற்கு வனத்துறையினருக்கு உதவுவதற்காக முதுமலையில் இருந்து சீனிவாசன் என்ற கும்கி யானையும் வரவழைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை ‘டி.23’ என அடையாளம் காணப்பட்ட ஆட்கொல்லி புலி, சிங்காரா வனப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரை தாக்க முயற்சித்தது. இதையடுத்து மக்கள் யாரும் வெளியில் நடமாட வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் வனத்துறையினர் எச்சரித்தனர். மசினகுடி அருகேயுள்ள குறும்பர்பாடியைச் சேர்ந்த பசுவன்(65) என்ற பழங்குடியின முதியவரை தாக்கி கொன்ற புலி, அவரது உடலை வனத்துக்குள் இழுத்துச் சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனிடம் கேட்டபோது, ‘‘கூடலூரில் இருந்த புலி, சிங்காரா வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளது. எனவே, மக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என எச்சரித்தோம்.

இந்நிலையில் ஒருவரை புலி தாக்கிக் கொன்றுள்ளது. மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிக்கும் பணியில் முழு வீச்சில் வனத்துறையினர் ஈடுபட்டுஉள்ளனர்’’ என்றார். இந்நிலையில், ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல முதன்மை தலைமைவனப்பாதுகாவலர் உத்தரவிட்டுஉள்ளார்.

புலி தாக்கி உயிரிழந்தோர்..

கடந்த ஜூலை மாதம் முதுமலை வனப்பகுதியில் உள்ள முதுகுழி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குஞ்சுகிருஷ்ணன், ஆகஸ்ட் மாதம் பொக்கபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர், கடந்த மாதம் 24-ம் தேதி தேவன் எஸ்டேட் பகுதியில் சந்திரன், நேற்று பசுவன் என்ற முதியவர் என நான்கு பேரை ‘டி.23’ என்றழைக்கப்படும் இந்த ஆட்கொல்லிப் புலி வேட்டையாடியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x