Published : 14 Sep 2021 03:13 AM
Last Updated : 14 Sep 2021 03:13 AM

நீட் தேர்வு விவகாரத்தில் - மாணவர்களையும், பெற்றோரையும்திட்டமிட்டு ஏமாற்றிய திமுக : எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டு

நீட் தேர்வு விவகாரத்தில், மாணவர்களையும் பெற்றோரையும் திட்டமிட்டு திமுக அரசு ஏமாற்றியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.

சட்டப்பேரவையில் இருந்துநேற்று வெளிநடப்பு செய்த பிறகு,செய்தியாளர்களிடம் எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி கூறியதாவது:

வாணியம்பாடியில் சமூக ஆர்வலர் வாசிம் அக்ரம், தொழுகை முடித்து வீடு திரும்பியபோது கூலிப்படையினர் அவரை கொலை செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு அரசு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

மாணவர்கள் குழப்பம்

திமுக தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்த நிலையில் ஆட்சிஅமைந்தும் ரத்து செய்யப்படவில்லை. இதில் ஒரு தெளிவான அறிவிப்பை அரசு வெளியிடாத நிலையில், மாணவர்களும், பெற்றோரும் குழப்பமடைந்தனர்.

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறியதால், அதை நம்பி, மாணவர்கள் தங்களை தேர்வுக்கு தயார்செய்யவில்லை. குழப்பமான நிலையில், தேர்வை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால், சேலத்தை சேர்ந்தமாணவர் தனுஷ் தற்கொலை செய்தது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு திமுக அரசுதான் காரணம்.இதை அவையில் தெரிவித்து, தகுந்த பதில் அளிக்காததால் வெளிநடப்பு செய்துள்ளோம்.

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான மசோதாவை அரசு கொண்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் ஏற்கெனவே நீட் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தல் வந்துவிட்டது. உச்ச நீதிமன்றமும் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளது.

இந்நிலையில்தான் நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நாம்தான் நீட்தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பைஆய்வு செய்ய நீதிபதியை நியமித்து, அவரது தலைமையில் விசாரிக்கப்பட்டது. அவர் ஒரு கருத்தைகூறினார். ஒருவர் தனிப்பட்ட முறையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதிலும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எந்த இடத்திலும் அந்த நீதிமன்றம் கூறவில்லை. எனவே, மாணவர்களையும், பெற்றோரையும் திட்டமிட்டு திமுக அரசு ஏமாற்றியுள்ளது.

அவர்களுக்கும் பொருந்துமா?

நாங்கள் நீட் தேர்வை ரத்துசெய்ய தீர்மானம் கொண்டுவந்தபோது, அதை அயோக்கியத்தனம் என்று திமுக எம்.பி. ராசாகூறினார். இப்போது அவர்கள் தீர்மானத்தை கொண்டு வருகின்றனர். இது அவர்களுக்கும் பொருந்துமா என்பதுதான் என் கேள்வி.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைஎந்த அரசு என்றாலும் அமல்படுத்தியே தீர வேண்டும். அதைமீறி செயல்பட முடியுமா. ஆனாலும் எப்படியாவது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனஅதிமுக அரசு சட்டப் போராட்டம் நடத்தியது.

நீட் தேர்வுக்கு எதிராக கொண்டு வரப்படும் சட்ட மசோதாவை ஆதரிப்போம். தமிழகத்துக்கு எதுநன்மை அளிக்குமோ, அதற்கு அதிமுக முழுமையாக ஆதரவு அளிக்கும். மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதை எதிர்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x