

படங்கள் : மா.பிரபு, எஸ்.சத்தியசீலன்
சென்னை: கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், சென்னை, புறநகரில் நேற்று விடிய விடிய மழை பெய்தது. இதனாலா, பூமி குளிர்ந்து ரம்மியமான சூழல் நிலவியது.
சென்னை, புறநகரில் கடந்த இரு வாரங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. கடந்த சில தினங் களாக சென்னையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வந்தது. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமலும், இரவில் புழுக்கத்தால் தூங்க முடியாமலும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், 7-ம் தேதி நள்ளிரவு மற்றும் 8-ம் தேதி காலை ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக, சென்னை, புறநகரில் நேற்று அதிகாலை நேரத்தில் பரவலாக மழை பெய்தது. காலையிலிருந்து லேசான தூரல் மழை பெய்தது.
இதனால், காலை முதலே மாநகர், புறநகர் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. அதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகலிலும் சென்னை, புறநகர் பகுதிகளில் மீண்டும் மழை பெய்து, சாலையில் மழைநீர் ஓடியது.
படம் : எம்.முத்துகணேஷ்
சாலையோரங்களில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக, நுங்கம்பாக்கம், டிஜிபி அலுவலகம், எண்ணூர், சோழிங்க நல்லூரில் தலா 2 செ.மீ, தண்டையார்பேட்டை, எம்ஜிஆர் நகர், பெரம்பூர், சைதாப்பேட்டை, சென்னை ஆட்சியர் அலுவலகம், வில்லிவாக்கம், அண்ணா பல்கலைக் கழகம் ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
விமான சேவைகள் பாதிப்பு: சென்னையில் மழை காரணமாக நேற்று மோசமான வானிலை நிலவியதால், சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடி யாமல், நடுவானில் வட்டமடித்து கொண்டிருந்தன. பெங்களூர், மும்பையில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் உட்பட 5 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாததால், அந்த விமானங்களை பெங்களூருக்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சிறிது நேரத்தில் வானிலை சீரானதும், விமானங்கள் சென்னையில் தரையிறங்கின.
அதேநேரம், சென்னையில் இருந்து அகமதாபாத், டெல்லி, கண்ணூர், தூத்துக்குடி, கோவை, சேலம் உள்ளிட்ட 10 இடங்களுக்கு செல்ல இருந்த விமானங்கள் பலத்த மழையால் தாமதமாக புறப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் மொத்தமாக 15-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.