

அமைச்சர் நிர்மல் குமார்
சென்னை: “பெண்கள் குறித்து அவதூறாக பேசியதால்தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்றுதான் குறிப்புகள் உள்ளதே தவிர, மிசா சட்டத்தில் தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என எந்தக் குறிப்பிலும் கிடையாது” என்று சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
இன்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “ நேற்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை அளித்த ஆதாரங்கள் குறித்துதான் பேசினார். அவர் விசாரணையை பற்றியோ, நீதிமன்றத்தை பற்றியோ எதுவும் பேசவில்லை. சர்க்காரியா கமிஷன் பற்றி ஏற்கெனவே இந்த அவையிலேயே உள்ளது, அதுபற்றி தானே அவர் பேசினார்.
பூச்சிக்கொல்லி மருந்து தெளித்ததில் 25 ஆயிரம் ரூபாய் அப்போதைய முதல்வர் கருணாநிதி, தன் செயலாளர் மூலமாக வாங்கியது. அடுத்ததாக ரூ.25 ஆயிரம் வாங்கியது என அனைத்தும் சர்க்காரியா கமிஷனில் உள்ளது. எங்கெங்கெல்லாம் கருணாநிதி பணம் வாங்கினாரோ அது அனைத்தும் சர்க்காரியா கமிஷனில் உள்ளது.
சர்க்காரியா கமிஷனில் உள்ளதைத்தான் முதல்வர் பேசினார், இதில் ஒளிவு மறைவு ஏதும் இல்லை. கொடுக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளில் 6 குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதாக சர்க்காரியா கமிஷன் சொன்னது. அதன் அடிப்படையில் தான் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
மிசா காலங்களில் திருட்டு வழக்கு, வழிப்பறி வழக்கு, பெண்கள் குறித்த வழக்குகளில் கூட யாரையும் கைது செய்யலாம். எனவே அப்போது கைதான எல்லோரையும் மிசாவில் கைது செய்ததாக கருத முடியாது.
20 அம்ச திட்டத்தை அறிவித்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி குறித்து, ‘21 அம்ச திட்டம்’ என்று அவதூறாக பேசியவர்தான் மு.க.ஸ்டாலின். இதுபோன்ற விஷயங்களின் அடிப்படையில் தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.
பெண்கள் குறித்து அவதூறாக பேசியதால்தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்றுதான் குறிப்புகள் உள்ளதே தவிர, மிசா சட்டத்தில் தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என எந்தக் குறிப்பிலும் கிடையாது. இரா.செழியன் மொழிபெயர்த்த புத்தகத்திலும் இது குறித்த குறிப்பு கிடையாது. அன்று ஸ்டாலின் செய்ததையே இப்போது எதிர்க்கட்சித் தலைவரும் செய்கிறார். ஆபாச நதியாக பேசுவதை அவர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.