

பூகம்பத்தால் பேரழிவைச் சந்தித்துள்ள வெனிசுலாவில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ திட்டத்தின்கீழ், 9 மருத்துவ அதிகாரிகள் உட்பட 41 பேர் கொண்ட ராணுவக் குழுவை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.படம்: பிடிஐ
புதுடெல்லி / கராகஸ்: வெனிசுலா பூகம்பத்தில் இதுவரை 589 பேர் உயிரிழந்துள்ளனர். 49,500-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ மூலம் 2 விமானங்களில் 35 டன் நிவாரணப் பொருட்களை வெனிசுலாவுக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
தென்அமெரிக்க நாடான வெனிசுலாவின் யாராகுய் மாகாணத்தின் சான்பெலிப், யுமரே நகரங்களை மையமாகக் கொண்டு நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த 2 பூகம்பங்கள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அலகில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவானது. இதன்காரணமாக யாராகுய், லா குய்ரா உட்பட 7 மாகாணங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் கராகஸில் நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் தரைமட்டமாகி உள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெனிசுலா ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு படைப் பிரிவுகளும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு உள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தென்அமெரிக்க நாடுகளின் ராணுவ வீரர்களும் மீட்புப் பணியில் இணைந்துள்ளனர்.
இந்திய ராணுவத்தை சேர்ந்த 9 மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் உட்பட 41 மருத்துவப் பணியாளர்களும் வெனிசுலாவுக்கு சென்றுள்ளனர். அவர்கள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயர்தர சிகிச்சைகளை அளிப்பார்கள் என்று மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் சார்பில் வெனிசுலாவில் இலவசமாக இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அந்த நாட்டின் தகவல் தொடர்பு சீரடைந்திருக்கிறது. ஆனால் மின் விநியோகம், குடிநீர் விநியோகம், சமையல் காஸ் விநியோகம் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பூகம்ப பாதிப்புகள் குறித்து மீட்புப் படை வீரர்கள் கூறியதாவது: அடுத்தடுத்து ஏற்பட்ட 2 பூகம்பங்களால் லா குய்ராவின் மலைப் பகுதிகளில் கட்டப்பட்டிருந்த அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளும் நொறுங்கி சரிந்துள்ளன. தலைநகர் கராகஸிலும் நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்துள்ளன.
வெனிசுலா பாதுகாப்பு படைகளை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா உட்பட 25 நாடுகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்களும் மீட்புப் பணிகளில் உதவி வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மோப்ப நாய்களின் உதவியுடன் அதிதீவிரமாக தேடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
‘பீஷ்ம் க்யூப்’ அவசரகால மருத்துவமனைகள்
நிவாரணப் பொருட்களுடன் 2 ‘பீஷ்ம் க்யூப்’ அவசரகால நடமாடும் மருத்துவமனைகளையும் வெனிசுலாவுக்கு இந்தியா அனுப்பியுள்ளது. ‘BHISHM' (இந்திய சுகாதார முன்னெடுப்பு - நட்பு உதவி) திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பீஷ்ம் க்யூபில் 1,000 மருத்துவ உபகரணங்கள், அத்தியாவசிய மருந்துகள் இருக்கும். இதன்மூலம் போர் மற்றும் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு நாளில் 200 பேர் வரை சிகிச்சை அளிக்க முடியும். ஒரு நாளில் 20 அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். ஒரு பீஷ்ம் கியூபில் உள்ள கூடாரம் மூலம் 12 நிமிடங்களில் தற்காலிக மருத்துவமனையை உருவாக்க முடியும்.
இதில் உள்ள உபகரணங்கள் மூலம் மின்சாரம், ஆக்ஸிஜனையும் உடனடியாக உற்பத்தி செய்யலாம். 180 மொழிகளில் நோயாளிகளிடம் தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும் பிரத்யேக செயலியும் இதில் உள்ளது. உக்ரைன், மாலத்தீவு, ஜமைக்கா, கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா சார்பில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள ‘பீஷ்ம் க்யூப்’ அவசரகால தற்காலிக மருத்துவமனைகள் தற்போது மனிதாபிமான அடிப்படையில் வெனிசுலாவுக்கு வழங்கப்பட்டுள்ளன.