

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர் ஊழியர் கூட்டமைப்பு தொடர் போராட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் மற்றும் ஒய்வூதியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினரின் தொடர் காத்திருப்பு போராட்டம் பல்கலைக்கழக நிர்வாக அலுவலர் கட்டிடம் முன்பு இன்று (பிப்.25) காலை தொடங்கியது.
இப்போராட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசினார். இதில், இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆ.ரவி, கபில்தேவ், துணை ஒருங்கிணைப்பாளர்கள் மனோகரன், பேராசிரியர் முத்து வேலாயுதம், பேராசிரியர் இளங்கோ உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர் ஊழியர்கள் பங்கேற்று உள்ளனர்.
முன்னதாக, 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையிலுள்ள பதவி உயர்வுகள், பணப் பயன்கள், ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியம் போன்றவற்றை வழங்கிட வலியுறுத்தி கடந்த ஜனவரி மாதம் முதல் உண்ணாவிரதப் போராட்டம், தொடர் உள்ளிருப்புப் போராட்டங்கள் நடத்தியதின் விளைவாக அண்மையில் தமிழக அரசு கூட்டமைப்பு பொறுப்பாளர்களை முத்தரப்புப் பேச்சு வார்த்தைக்கு அழைத்து பேசியது.
இதில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் இன்று (பிப்.25) முதல் பேராசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.