Published : 17 May 2023 05:03 AM
Last Updated : 17 May 2023 05:03 AM

பாஜகவை வீழ்த்த ஒன்றிணைவோம் - முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபின் சீதாராம் யெச்சூரி தகவல்

சென்னையில் நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி. உடன், கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், அமைச்சர் துரைமுருகன்.

சென்னை: பாஜகவை தோற்கடிக்க ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும், விரைவில் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார்.

சென்னையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சீதாராம் யெச்சூரி சந்தித்துப் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அமைச்சர் துரைமுருகன் உடன் இருந்தனர்.

பின்னர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் கூறும்போது, “கர்நாடக தேர்தலுக்குப் பிந்தைய நிலவரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விவாதித்தேன். இந்திய அரசமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க, பாஜகவை வீழ்த்த வேண்டும். இதற்காக அனைத்து கட்சிகளுடனும் இணைந்து செயல்படுவோம். இந்திய அளவில் எதிர்க் கட்சிகளை திரட்டி ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடத்தப்படும்” என்றார்.

இந்த சந்திப்பின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு கல்விக் கொள்கை வகுக்கும் வல்லுநர் குழுவில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை சீரமைக்க கோரி முதல்வரிடம் கடிதம் வழங்கினார்.

அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் நாடு முழுவதும் கல்வியில் சனாதன இந்துத்துவ கோட்பாட்டை புகுத்ததீவிரமாக முயற்சித்து வருகிறது. இதுமட்டுமின்றி, பாடப் புத்தகங்களை மாற்றியமைப்பது, சுதந்திரப் போராட்ட வரலாறு உட்பட இந்திய வரலாற்றை மத அடிப்படையில் மாற்றிக் கற்பிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் தமிழக அரசு, மாநில கல்விக் கொள்கையை உருவாக்க நிபுணர்களைக் கொண்ட குழுவை அமைத்தது. ஆனால், இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தும் வகையில், மாநில கல்விக் கொள்கை உருவாக்கும் குழுவில் ஏற்பட்டுள்ள சர்ச்சை மிகுந்த கவலையளிக்கிறது. இதன்மூலம் தமிழக அரசின் உயர்ந்த நோக்கம் சிதைக்கப்படுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இப்பிரச்சினையில் முதல்வர் தலையிட்டு, கல்விக் கொள்கை குழுவில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைச் சரிசெய்து, விஞ்ஞான அடிப்படையிலான மாநில கல்விக்கொள்கையை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், இப்பணியை செழுமைப்படுத்திட, ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவை மறுசீரமைப்பது குறித்தும் அரசு ஆலோசிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x