Published : 30 Mar 2023 06:15 AM
Last Updated : 30 Mar 2023 06:15 AM

குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைப்பு

கோப்புப்படம்

சென்னை: வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை பின்னர் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

சம்பவம் நடந்து 90 நாட்களாகியும் இந்த வழக்கில் ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை என்றும், எனவே, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் எனவும் கோரி, திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டை சேர்ந்த ராஜ்கமல் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, சிபிசிஐடி புலன் விசாரணை அதிகாரியின் அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், இந்த வழக்கின் புலன் விசாரணை நியாயமாக நடந்து வருவதாகவும், உயரதிகாரிகள் விசாரணையை கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது நீதிபதிகள், இந்த சம்பவம் நடந்து 90 நாட்களுக்கு மேலாகியும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என தெரிவித்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து இரு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், ஒருநபர் ஆணையத்துக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கும் உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x