Published : 01 Sep 2017 08:26 AM
Last Updated : 01 Sep 2017 08:26 AM

இரட்டை இலை சின்னம் யாருக்கு? - ஓபிஎஸ், சசிகலா, தினகரனுக்கு நோட்டீஸ் : செப்.13-க்குள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

அதிமுகவில் பெரும்பான்மை உள்ள அணியிடம் இரட்டை இலை சின்னத்தை ஒப்படைக்கக் கோரி தாக்கலான மனு தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலையை, அக்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக தேர்தல் ஆணையம் முடக்கி உள்ளது. அதிமுக நிர்வாகக் குழு தேர்தல் நடத்தி, அதில் வெற்றி பெறும் அணியிடம் இரட்டை இலை சின்னத்தை ஒப்படைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் ஏற்கெனவே இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி மனு அளித்துள்ளவர்களை எதிர் மனுதாரர்களாக சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து அதிமுக (புரட்சித் தலைவி அம்மா அணி) சார்பில் இரட்டை இலைக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் மதுசூதனன், செம்மலை ஆகியோரையும், அதிமுக (அம்மா அணி) சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த வி.கே.சசிகலா, தினகரன் ஆகியோரையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்க்கக் கோரி நேற்று முனதினம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அதிமுகவின் இரு அணிகளைச் சேர்ந்தவர்களை எதிர் மனுதாரர்களாக சேர்க்கக் கோரி தாக்கல் செய்த மனுவை ஏற்ற நீதிபதிகள், மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு தலைமை தேர்தல் ஆணையர், ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், செம்மலை, வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், அடுத்த விசாரணையை செப்.13-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x