Published : 06 Sep 2017 09:54 AM
Last Updated : 06 Sep 2017 09:54 AM
அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்கள், எம்பிக்களுடன் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை நாளை சந்திக்கிறார்.
அதிமுக இரு அணிகள் இணைந்த பிறகு அதிமுக அம்மா கட்சி பொதுச் செயலாளர் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு 19 எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பின்னர் முதல்வர் கே.பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும் அதனால் அவருக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் கூறி, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தனித்தனியாக மனு கொடுத்தனர். இதையடுத்து, அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் மனு கொடுத்தன. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகியோர், “இரண்டு நாட்களில் ஆளுநர் முடிவு எடுக்காவிட்டால் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம் பேசி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம்” என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் 7-ம் தேதி (நாளை) சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவரது எம்எல்ஏக்கள், எம்பிக்களும் உடன் செல்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT