Published : 12 Mar 2023 12:55 PM
Last Updated : 12 Mar 2023 12:55 PM

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ: ஜார்க்கண்ட் இளைஞர் கைது

கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் வட மாநில தொழிலாலர்கள் தாக்கப்படுவதாக சொல்லி போலி வீடியோ வெளியிட்டு அவதூறு பரப்பிய வழக்கில் ஜார்க்கண்ட மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த்குமார் என்ற இளைஞரை தமிழக சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

வட மாநிலத் தொழிலாளர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்துவதாக வதந்தி பரப்பட்டது. இதையடுத்து பிஹார், ஜார்கண்ட் மாநிலத்தின் சார்பில் செயலர், ஆட்சியர் உள்ளிட்ட பிரதிநிதிகள் அடங்கிய குழு தமிழகம் வந்து தொழிலாளர்களை நேரில் சந்தித்து, களத்தில் இருந்த உண்மைத்தன்மையை வீடியோவாக பதிவு செய்தனர்.

தொழிலாளர்கள் யாரும் தாக்கப்படவில்லை என்பது உறுதியான நிலையில், வதந்தி செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்தது. அதன் ஒருபகுதியாக திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவின் பேரில் சைபர் க்ரைம் ஆய்வாளர் சொர்ணவள்ளி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சமூக வலைதளங்களை கண்காணித்து வந்தனர். ஃபேஸ்புக்கில் சிபிஎல் மீடியா என்ற கணக்கில் ரூபேஷ்குமார் என்பவர் போலியான வீடியோவை பதிவேற்றம் செய்து, வதந்தியை பரப்பியது கண்டறியப்பட்டது.

இதையடுத்து திருப்பூர் மாநகர சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிந்தனர். அவர் பிஹார் மாநிலம் கிழக்கு சம்பாரன் மாவட்டம் ஜெயின்பூர் அருகே பன்கட்டி கிராமத்தைச் சேர்ந்த ரூபேஷ்குமார் (23) என்பது தெரியவந்தது. இவர் தெலங்கானா மாநிலம் வனபார்த்தி மாவட்டம் சின்னகுண்டப்பள்ளி மாவட்டத்தில் வைத்து போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஜார்க்கண்ட் இளைஞர் கைது: இந்நிலையில், இந்த வழக்கில், தமிழகத்தில் வட மாநில தொழிலாலர்கள் தாக்கப்படுவதாக சொல்லி போலி வீடியோ வெளியிட்டு அவதூறு பரப்பிய ஜார்க்கண்ட மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த்குமார் என்ற இளைஞரை தமிழக சைபர் க்ரைம் போலீஸார் ஜார்க்கணட் சென்று கைது செய்தனர்.

இதுதொடர்பாக திருப்பூர் மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில், "சமீபகாலமாக சமூகவலைதளத்தில் புலம்பெயர்ந்த வடமாநி தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்பொருட்டு திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் சைபர் க்ரைம் ஆய்வாளர் சொர்ணவள்ளி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேற்படி தனிப்படையினர் சமூகவலைதளங்கள் கண்காணித்து வந்தததில் முகநூலில் பிரஷாந்தகுமார் என்பவர், உண்மைக்குப் புறம்பான பொய் செய்திகளை வீடியோவாக தயார் செய்து முகநூலில் பதிவேற்றம் செய்து வதந்தி பரப்பி வந்தது தெரியவந்தது.

எனவே பிரஷாந்த்குமார் மீது திருப்பூர் மாநகர சைபர் க்ரைம் போலீஸார், 153ஏ, 505(2) ஆகிய இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின்படி கடந்த மார்ச் 8ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பிரஷாந்த்குமாரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு, ஜார்க்கண்ட் மாநிலம், லேட்டஹர் மாவட்டம் ஹொகிகாரா எனும் கிராமத்தில் பிரஷாந்த்குமாரை கைது செய்தது.

உரிய விசாரணைக்குப்பிறகு, லேட்டஹக் மாவட்ட உட்கோட்ட நீதித்துறை நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது உத்தரவின்பேரில் திருப்பூர் அழைத்து வரப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 12) திருப்பூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x