Published : 12 Mar 2023 04:07 AM
Last Updated : 12 Mar 2023 04:07 AM

100+ அரங்குகளுடன் ஆவடியில் மார்ச் 17-ல் புத்தகக் காட்சி தொடக்கம்

திருவள்ளூர்: ஆவடியில் மார்ச் 17-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை புத்தகக் காட்சி நடைபெறும் என பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

இது குறித்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் பொறுப்பேற்ற உடன் புத்தகம் வாசிக்க வேண்டும் என்ற உணர்வோடு கி.மு., கி.பி., ஆகிய கால கட்டங்களில் நடந்த வரலாறுகளை பொதுமக்கள், இளைஞர்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகம் முழுவதும் புத்தகக் காட்சி நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

அதன் பேரில், கடந்த ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் 11நாள் புத்தகக் காட்சி நடைபெற்றது. இந்நிலையில், இந்தஆண்டுக்கான புத்தகக் காட்சி ஆவடி மாநகராட்சியில் உளள எச்விஎஃப் தொழிற்சாலை மைதானத்தில் வரும் 17-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது.

இக்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் சுமார் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றிருக்கும் காட்சியில் புத்தகம் வாங்குபவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படும். காட்சி நடைபெறும் நாட்களில் தினமும் மாலை நேரத்தில் பட்டிமன்றம், கவியரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

சிறப்பு பேச்சாளர்களாக கோபிநாத், எஸ்.ராஜா, பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், ஈரோடு மகேஷ், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, சுகி சிவம், மருத்துவர் கு.சிவராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்று ஒவ்வொரு தலைப்புகளின் கீழ் உரையாற்றுகின்றனர். இவ்வாறு அமைச்சர் நாசர் கூறினார்.

முன்னதாக, இப்புத்தகக் கண்காட்சி குறித்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புத்தகத் திருவிழா-2023 இலச்சினையை அமைச்சர் நாசர் வெளியிட்டார்.

இச்செய்தியாளர் சந்திப்பின் போது, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், கூடுதல் ஆட்சியர் செ.ஆ.ரிஷப், ஆவடி மாநகராட்சி ஆணையர் க.தர்பக ராஜ், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்க செயலாளர் எஸ்.கே.முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x