Published : 10 Mar 2023 07:30 AM
Last Updated : 10 Mar 2023 07:30 AM

ஜே.பி.நட்டா இன்று கிருஷ்ணகிரி வருகை: காணொலி மூலம் கட்சி அலுவலகங்களை திறக்கிறார்

கிருஷ்ணகிரி: பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (மார்ச் 10) கிருஷ்ணகிரிக்கு வருகிறார். கிருஷ்ணகிரி கட்சி அலுவலகம் மற்றும் காணொலி மூலம் 9 மாவட்ட கட்சி அலுவலகங்களைத் திறந்து வைக்கிறார்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளியில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், செய்தியாளர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி கூட்டுரோட்டில் இன்று (மார்ச் 10) மாவட்ட பாஜக அலுவலகத்தைத் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திறந்து வைக்கிறார்.

இதற்காகக் காலை 11 மணிக்கு கிருஷ்ணகிரிக்கு வருகிறார். 9 மாவட்ட கட்டிடங்கள் பிறகு கிருஷ்ணகிரி அலுவலகக் கட்டிடத்தையும், காணொலி மூலம் தருமபுரி, நாமக்கல், திருச்சி, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்ட பாஜக அலுவலகங்களையும் திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து 75 அடி உயரக் கம்பத்தில் பாஜக கொடியை ஏற்றி வைத்து, பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார். 17 மாவட்டங்களில் பணி இந்நிகழ்வுக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகிக்கிறார். மத்திய இணை அமைச்சர் முருகன் முன்னிலை வகிக்கிறார்.

மாநில, மாவட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்க உள்ளனர்.தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத அளவுக்கு ஒருநாளில் 10 மாவட்டங்களில் கட்சி அலுவலகம் திறக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இன்னும் 17 மாவட்டங்களில் பாஜக அலுவலகம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு அரசியல் கட்சியில் இருந்தும் மற்ற கட்சிகளுக்குச் செல்வது இயற்கையான விஷயம்.

போனவர்களைப் பற்றிக் குறை சொல்வதும் கிடையாது. வந்தவர்களைப் பாராட்டுவதும் கிடையாது. ஊழல் அற்ற ஆட்சியை பாஜகவால்தான் கொடுக்க முடியும். அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்பது எங்களின் இலக்கு. அந்த இலக்கை நோக்கிச் செல்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சிவபிரகாஷ், மாநில செயற்குழு உறுப்பினர் முனிராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x