Published : 10 Mar 2023 06:55 AM
Last Updated : 10 Mar 2023 06:55 AM

கால்நடை பராமரிப்பு, மீன்வளத் துறை சார்பில் ரூ.312 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள்: மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை: கால்நடை பராமரிப்பு, மீன்வளத் துறை சார்பில் ரூ.312.37 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் தேனி மாவட்டம் வீரபாண்டியில் கால்நடை மருத்துவக் கல்லூரி, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தலா ரூ.82.13 கோடியில் கல்வி வளாகங்கள், விடுதிக் கட்டிடங்கள், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ.11.94 கோடியில் புதிய கட்டிடங்கள், திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ.7.14 கோடியில் கூடுதல் விடுதிக்கட்டிடம் ஆகியவை கட்டப்பட் டுள்ளன.

இதேபோல, நாமக்கல் மாவட்டம் மோகனூர் மருத்துவக் கல்லூரியில் ரூ.4.15 கோடியில் கால்நடை சிறப்பு மருத்துவமனை, சென்னை மாதவரத்தில் தேசிய கால்நடை குறிக்கோள் பணித் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியில் கால்நடை இறைச்சி உடல் அங்க பயன்பாட்டு ஆலை ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

இவ்வாறு மொத்தம் ரூ.189.49 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.மேலும், நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் ரூ.47.50 கோடியில், 3 ஆண்டுகளில் 7.2 லட்சம் பாலினம் பிரிக்கப்பட்ட உறைவிந்து குச்சிகள் உற்பத்தி செய்யும் வகையிலான உற்பத்தி நிலையத்தையும் முதல்வர் திறந்துவைத்தார்.

இதுதவிர, செங்கல்பட்டு, விருதுநகர், சேலம், தஞ்சாவூர், ஈரோடு, சிவகங்கை, மதுரை, திருச்சி, வேலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், கோயம்புத்தூர், விழுப்புரம், தருமபுரி, திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு தலா ஒரு வாகனம் வீதம், ரூ.2.40 கோடி மதிப்பில், 16 உறைவிந்து குச்சிகள் மற்றும் திரவ நைட்ரஜன் விநியோக வாகனங்களையும் முதல்வர் வழங்கினார்.

மேலும், மீன்வளத் துறை சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகர், தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம், பெரியதாழை, குலசேகரப்பட்டினம், திருநெல்வேலி மாவட்டம் கூனியூர் அரசு மீன்விதைப் பண்ணை, ராதாபுரம் ஆகிய இடங்களில், ரூ.61.32 கோடியில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டிடங்கள், மீன்பிடிக் கட்டமைப்புகளை முதல்வர் திறந்து வைத்தார்.

ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் சார்பில், சென்னை மாதவரம், நாகப்பட்டினம் தலை ஞாயிறு, ராமநாதபுரம் மண்டபம், தூத்துக்குடி துறைமுகம் உள்ளிட்ட இடங்களில், ரூ.11.66 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

முதல்வர் திறந்து வைத்த கட்டிடங்கள் உள்ளிட்டவற்றின் மொத்த மதிப்பு ரூ. 312.37 கோடி ஆகும். இந்த நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் ந.கவுதமன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறைச் செயலர் ஆ.கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x