Published : 09 Mar 2023 02:39 PM
Last Updated : 09 Mar 2023 02:39 PM

திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை விவகாரம்: 100-வது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம்

பேரணியில் விவசாயிகள்

தஞ்சாவூர்: திருமண்டங்குடி தனியார் ஆலை விவகாரத்தில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்தும் விவசாயிகளின் போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியது.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.300 கோடி முழுவதையும் திரும்பச் செலுத்தி, விவசாயிகளை சிபில் ஸ்கோர் பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆலையைத் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சர்க்கரை ஆலை முன்பு கடந்தாண்டு நவ.30-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டத்தின் 100-வது நாளான இன்று, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் எம்எல்ஏ நாகை மாலி, தமிழ்நாடு விவசாயச் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், மதிமுக மாநிலப் பொதுச்செயலாளர் முருகன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஏராளமானோர் கையில் கரும்புடன் ஆதனூர் கிராமத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பல்வேறு கிராமங்கள் வழியாக திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலைக்கு கண்டன முழக்கமிட்டபடி நடந்து வந்தனர்.

இது குறித்து எம்எல்ஏ நாகை மாலி கூறியது: ”திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகள் 100 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சர்க்கரை ஆலை நிர்வாகம், விவசாயிகளிடம் அநியாயமாக நடந்து கொண்டுள்ளது. இந்தியாவிலேயே இது போன்ற மோசடி கேள்வி பட்டதில்லை. ஆனால் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம், விவசாயிகள் பெயரில் வங்கிகளில் கடன் வாங்கி ஊழல் செய்து உள்ளது. இதனை அறியாத விவசாயிகள் மற்ற வங்கிகளில் கடன் கேட்கச் சென்றபோது தான், தங்கள் பெயரில் கடன் இருப்பது தெரிந்துள்ளது. இது ஜனநாயக நாட்டில் நடைபெறுமா என்பது தெரிய வில்லை. இது எந்த வகையிலான நியாயமாகும். இதில் பங்கேற்ற விவசாயி ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

இந்திய அளவில் டெல்லியில் நடைபெற்ற போராட்டம் போல், இப்போராட்டம் நடைபெறுகிறது. எனவே, போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன் வரவேண்டும். வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, தமிழக முதல்வரை எதிரில் வைத்துக்கொண்டு இந்த விவகாரத்தை கடுமையாக பேசி எதிரொலிப்பேன், தீர்வும் காண்பேன். இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை அரசிடம் வழங்கியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x