Published : 24 Feb 2023 07:35 AM
Last Updated : 24 Feb 2023 07:35 AM

20% ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி: அரிசியை தமிழகத்துக்குள் மட்டுமே பயன்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த தளர்வுகளுடன் பெறப்படும் நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசியை தமிழகத்துக்குள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த ஜனவரி இறுதி மற்றும் பிப்ரவரி முதல் வாரத்தில் பருவம் தவறி கனமழை பெய்தது. இதனால், காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர சிலமாவட்டங்களில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் ஏற் பட்ட பாதிப்புகள் தமிழக அரசால் கணக்கெடுக்கப்பட்டு, ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வரை நிவாரணம் அறிவிக்கப்பட்டது.

பிரதமருக்கு முதல்வர் கடிதம்: இதற்கிடையே, நெல் கொள்முதலின்போது ஈரப்பதம் அதிகம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வசதி ஏற்படுத்த, அதற்கான வழிகாட்டுதல்களில் கூடுதல் தளர்வு அதாவது 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய அனுமதி வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இதுதொடர்பாக மத்திய உணவுத் துறை செயலருக்கு தமிழக உணவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனும் கடிதம் எழுதினார். இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை அளித் தனர்.

இதைத் தொடர்ந்து, 20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய உணவு,பொது விநியோகத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக உணவுத் துறை செயலருக்கு, மத்திய உணவுத் துறை துணை ஆணையர் விஷ்வஜீத் ஹல்தார் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மத்தியக் குழு ஆய்வு: தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சி ஆகிய 8 மாவட்டங்களில் மத்திய குழுவினர் ஆய்வு நடத்தினர். அதன்படி, இந்த 8 மாவட்டங்களில் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்தவும், நெல் விற்பனையில் ஏற்படும் பிரச்சினையை களையவும், நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி அனுமதிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில், சாதாரணரகத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலை, 17-18 சதவீதம் என்றால் குவிண்டாலுக்கு ரூ.2,019.60 என்றும், 18-19 சதவீதம் என்றால் ரூ.1,999.20 என்றும், 19-20 சதவீதம் என்றால் ரூ.1,978.80 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆதார விலை நிர்ணயம்: சன்ன ரகத்துக்கு இதேபோல சதவீத வாரியாக ரூ.2,039.40, ரூ.2,018.80 மற்றும் ரூ.1,998.20 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விளையாத, சுருங்கிய நெல்லுக்கு 3 சதவீதத்தில் இருந்து கூடுதலாக 2 சதவீதம் என 5 சதவீதம் வரை தளர்வு அளிக்கப்படுகிறது.

அதன்படி, 3-4 சதவீதத்துக்கு சாதாரண நெல்லுக்கு ரூ.2,019.60, சன்ன ரகத்துக்கு ரூ.2,039.40 என்றும், 4-5 சதவீதம் வரை சாதாரண நெல்லுக்கு ரூ.1,999.20, சன்ன ரகத்துக்கு ரூ.2,018.80 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, சேதமடைந்த, நிறம் மங்கிய, முளைத்தநெல்லுக்கும் 5 சதவீதத்தில் இருந்துகூடுதலாக 2 சதவீதம் என 7 சதவீதம்வரை அனுமதிக்கப்பட்டு இதேதொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கு மட்டும் தளர்வு: மேலும், இந்த தளர்வுகளுடன் பெறப்படும் நெல்லில் இருந்துகிடைக்கும் அரிசியை தமிழகத்துக்குள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நெல்லை உலரவைக்கும் வசதியை தமிழக அரசே உருவாக்கவேண்டும். நெல் இழப்பு ஏற்பட்டால், அதையும் மாநில அரசே ஏற்கவேண்டும்.

இவ்வாறாக தளர்வு அடிப் படையில் பெறப்படும் நெல்லை உடனடியாக அரவைக்கு அனுப்ப வேண்டும். அரவை செய்யப்பட்டு பெறப்படும் அரிசியை, உணவுக் கழகத்திடம் பரிமாற்ற அடிப்படையில் அரிசி பெற கொண்டுவர கூடாது. இந்த தளர்வு இந்த 2022-23-ம் ஆண்டுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x