Published : 15 Jan 2023 03:02 PM
Last Updated : 15 Jan 2023 03:02 PM

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு | தமிழகத்தில் கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்த அன்புமணி கோரிக்கை

அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "முதுநிலை மருத்துவப் படிப்புக்காக மார்ச் 5ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்கள் நிரம்பி விட்டன. கடந்த சில நாட்களாக விண்ணப்பிக்கும் தமிழர்களுக்கு சொந்த மாநிலத்தில் தேர்வு மையங்கள் மறுக்கப்படுகின்றன

நீட் (பி.ஜி) தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த 7ம் தேதி தொடங்கப்பட்டாலும் கூட, அதற்கான தகுதிகள் கடந்த 13ம் தேதி தளர்த்தப்பட்டதால், அதன் பிறகு தான் தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் அதிகம் விண்ணப்பித்தனர். வாய்ப்பு மறுக்கப்படுவதால் அவர்கள் வெளி மாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் நிலை உருவாகியுள்ளது

வெகு தொலைவு பயணித்து தேர்வு எழுதுவது மன உளைச்சலை ஏற்படுத்தும். அது தேர்வு செயல்பாட்டை பாதிக்கும். தமிழகம், புதுச்சேரியில் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ள நிலையில், இந்த இரு மாநிலங்களிலும் அதிக தேர்வு மையங்களை தேசிய தேர்வு முகமை அமைத்திருக்க வேண்டும்

தேர்வு முகமை செய்த தவறால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது. எனவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும். அதன் விவரங்கள் ஆன்லைன் விண்ணப்ப தளத்தில் பிரதிபலிப்பதை தேர்வு முகமை உறுதி செய்ய வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x