Published : 09 Jan 2023 10:26 AM
Last Updated : 09 Jan 2023 10:26 AM

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடக்கம்: திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு 

ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று (ஜன.9) காலை சரியாக 10 மணிக்கு தொடங்கியது. சட்டப்பேரவை கூடியவுடன் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அது நிறைவுபெற்றதும் ஆளுநர் முதல்வர், உறுப்பினர்கள், ஊடகத்தினருக்கு தமிழில் தனது வணக்கங்களை உரித்தாக்கினார். அப்போது தொட்டே திமுக கூட்டணி கட்சியினர் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழங்கினர். ஒருகட்டத்தில் அவர்கள் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் வழக்கமாக ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில், இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று (ஜன.9) காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. கடந்தாண்டு சட்டப்பேரவை முதல் கூட்டம் கரோனா பரவல் காரணமாக கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்ட நிலையில், இந்தாண்டு வழக்கமான புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள பேரவைக் கூட்ட அரங்கிலேயே நடைபெற்று வருகிறது.

சட்டப்பேரவை முதல் கூட்டத்துக்காக, ஆளுநர் மாளிகையில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, தலைமைச்செயலகத்துக்கு 9.50 மணிக்கு வந்தார். ஆளுநரை, பேரவைத் தலைவர் மு.அப்பாவு, செயலர் கி.சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர். அதன்பின், காலை 10 மணிக்கு கூட்ட அரங்கில் ஆளுநர் தனது உரையை வாசிக்க தொடங்கினார்.

இந்நிலையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இதன்படி காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x