Published : 31 Dec 2022 05:45 AM
Last Updated : 31 Dec 2022 05:45 AM

காவல், தீயணைப்பு துறைகள் சார்பில் ரூ.23.72 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் - முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை: காவல், தீயணைப்பு துறைகள் சார்பில் ரூ.23.72 கோடி மதிப்பில்கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். 4,997 மீன்பிடி படகுகளில் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தும் திட்டத்தையும் தொடங்கிவைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநிலத்தின் அமைதியை பேணிக் காத்து, சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளை கட்டுதல், ரோந்து வாகனங்களை கொள்முதல் செய்தல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சென்னை முத்தாபுதுப்பேட்டை, திருநெல்வேலி மானூர், திருப்பூர் திருமுருகன்பூண்டியில் ரூ.3.47 கோடியில், 3 காவல் நிலையங்களுக்கான புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதேபோல, சென்னை ஆவடியில் ரூ.10 கோடியில் காவலர் சமுதாயக் கூடம், தருமபுரியில் ரூ.5.40 கோடியில் மாவட்ட காவல் அலுவலக இணைப்புக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளன.

இதுதவிர, திருவாரூர், கோவைமாவட்டங்களில் ரூ.4.85 கோடியில் 2 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு மொத்தம் ரூ.23.72 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.

மீன்பிடி விசைப் படகுகளில் பொருத்துவதற்காக, மேம்படுத்தப்பட்ட டிரான்ஸ்பாண்டர்களை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) உருவாக்கியுள்ளது.

இதன்மூலம் நிலப்பரப்பில் இருந்துகொண்டே, படகுகளுடன் இருவழிச் செய்தி பரிமாற்றம் மேற்கொள்ள முடியும். இந்த கருவியை படகில் பொருத்தி ப்ளூடூத் வாயிலாக இணைத்து, செல்போன் செயலி வழியாக தகவல்கள் பெறலாம்.

இந்த டிரான்ஸ்பாண்டர்கள் மூலம், அதிக மீன்கள் கிடைக்கும் இடங்கள், காலநிலை, வானிலை நிலவரங்களை படகுக்கு அனுப்பலாம். மேலும், இக்கருவி மூலம்ஆழ்கடலில் படகு நிலைகொண்டுள்ள இடத்தையும் துல்லியமாக அறியலாம்.

நீலப் புரட்சி திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள 4,997 மீன்பிடி விசைப் படகுகளில் ரூ.18 கோடி மதிப்பில் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்து, சென்னை, நாகை, தூத்துக்குடி, கன்னியாகுமரியை சேர்ந்த 10 விசைப்படகு உரிமையாளர்களுக்கு டிரான்ஸ்பாண்டர்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் ந.கவுதமன், தலைமைச் செயலர்இறையன்பு, உள்துறைச் செயலர்பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு, மீன்வளத் துறை செயலர் கார்த்திக், தீயணைப்புத் துறை இயக்குநர் சீமா அகர்வால், காவலர் வீட்டுவசதிக் கழகத் தலைவர் ஏ.கே.விஸ்வநாதன், ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், மீன்வளத் துறை ஆணையர் கே.எஸ்.பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x