Published : 30 Dec 2022 04:00 AM
Last Updated : 30 Dec 2022 04:00 AM

திருச்சி டிஎன்பிஎல் நிறுவனத்தில் ரூ.1,385 கோடியில் நவீன வன்மரக் கூழ் ஆலை

திருச்சி டிஎன்பிஎல் வளாகத்தில் நவீன வன்மரக் கூழ் ஆலையை நேற்று திறந்துவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், தொழில் துறைச் செயலர் ச.கிருஷ்ணன், டிஎன்பிஎல் தலைவர் மு.சாய்குமார், சிப்காட் மேலாண் இயக்குநர் எ.சுந்தரவல்லி, மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார்.

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேஉள்ள மொண்டிப்பட்டியில் செயல்படும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ரூ.1,385 கோடி மதிப்பிலான நவீன வன்மரக் கூழ் ஆலை மற்றும் திருச்சி மாவட்டத்தின் முதல் சிப்காட் தொழிற்பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் (டிஎன்பிஎல்) அலகு 2-ல் காகித அட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்குத் தேவையான காகிதக் கூழை, வெளிச்சந்தையிலிருந்து கொள்முதல் செய்வதற்குப் பதிலாக, அதே வளாகத்தில் உற்பத்தி செய்ய ரூ.2,520 கோடி மதிப்பிலான விரிவாக்கத் திட்டத்தை இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக ரூ.1,385 கோடியில், தினமும் 400 டன் உற்பத்தித் திறன் கொண்ட அதிநவீன வன்மரக் கூழ் தயாரிப்பு ஆலை, ரசாயன மீட்புப் பிரிவு மற்றும் 20 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்திப் பிரிவு ஆகியவை நிறுவப்பட்டுள்ளன.

இந்நிலையில், டிஎன்பிஎல் வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வன்மரக் கூழ் ஆலை மற்றும் மணப்பாறை அருகே ரூ.47.44 கோடியில் அமைக்கப்பட்டுள்ள, திருச்சி மாவட்டத்தின் முதல் சிப்காட் தொழிற்பூங்கா ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

தொடர்ந்து, சிப்காட் பூங்காவில் தொழில் தொடங்க உள்ள 4 நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீட்டு ஆணையை முதல்வர் வழங்கினார்.

இந்த நிகழ்வில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, சிப்காட் மேலாண் இயக்குநர் எ.சுந்தரவல்லி, டிஎன்பிஎல் நிறுவன கூடுதல் செயலாளரும், மேலாண் இயக்குநருமான மு.சாய்குமார், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைச் செயலர் ச.கிருஷ்ணன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, திருச்சி மாவட்டத்தில் ரூ.238 கோடியில் மேற்கொள்ளப்பட்ட 5,635 பணிகள் திறப்பு விழா, ரூ.308 கோடியிலான 5,951 பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, 22,716 பயனாளிகளுக்கு ரூ.79 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தமிழகம் முழுவதும் உள்ள 42,081 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2,548 கோடி வங்கிக் கடன் மற்றும் இதர பயன்கள் வழங்கும் விழா, 33 சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகள் மற்றும் சிறப்பாகச் செயல்பட்ட 8 வங்கிகளுக்கு விருதுகள் வழங்கும் விழா ஆகியவை திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றன.

இதில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் முடிவுற்ற பணிகளைத் தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டி, நலத்திட்ட உதவிகள், விருதுகளை வழங்கிப் பேசியதாவது: தமிழக இளைஞர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த விளையாட்டுப் பயிற்சி அளிப்பதற்காக தமிழகத்தில் 4 மண்டலங்களில் தலா ஒரு ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தேன். அதன்படி, திருச்சியில் அனைத்து வசதிகளுடன்கூடிய ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்படும்.

தமிழகத்தில் 50.24 லட்சம் உறுப்பினர்களுடன், 4.38 லட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களுக்கு இந்த நிதியாண்டில் ரூ.25 ஆயிரம் கோடி கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், கடந்த டிச. 16-ம் தேதி வரை 2,60,559 குழுக்களுக்கு, ரூ.14,120.44 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதில் நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதேபோல, காலநிலை மாற்றக் கொள்கையை உருவாக்கும் முன்மாதிரி மாநிலமாகவும் தமிழகம் விளங்குகிறது.

கடந்த ஓராண்டில் மட்டும் தமிழகத்தில் 8,549 கி.மீ. தொலைவு பயணம் செய்துள்ளேன். மொத்தம் 551 அரசு நிகழ்ச்சிகள், 96 கட்சி நிகழ்ச்சிகள் என 647 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். தமிழகம் முழுவதும் நலத் திட்டங்கள் வழங்கப்பட்டதால், 1.03 கோடி பேர் பயனடைந் துள்ளனர். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்த விழாவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.மூர்த்தி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.பி.க்கள் திருச்சி சிவா, சு.திருநாவுக்கரசர், ஜோதிமணி, மேயர் மு.அன்பழகன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலர் பெ.அமுதா, மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குநர் ச.திவ்யதர்ஷினி, மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், சன்னாசிப்பட்டி கிராமத்தில் உள்ள மீனாட்சி என்பவருக்கு, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு கோடியே ஒன்றாவது மருந்துப் பெட்டகத்தை அவரது வீட்டுக்கே சென்று முதல்வர் வழங்கினார்.

பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், 10,969 பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள் மற்றும் 15,366 அங்கன்வாடி ஊழியர்களுக்கு, ரத்த அழுத்தம் கண்டறியும் டிஜிட்டல் கருவிகள், சமூக அளவில் ரத்த சோகை கண்டறியும் கருவிகள் ஆகியவற்றையும் வழங்கினார்.

மேலும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைச் செயல்படுத்தும் பெண் சுகாதார தன்னார்வலர்கள், இடைநிலை சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை, ஆஷா பணியாளர்களுக்கு ரூ.500 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x