Published : 30 Dec 2022 04:15 AM
Last Updated : 30 Dec 2022 04:15 AM

காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி

பிரதிநிதித்துவப் படம்

காஞ்சி / செங்கை / திருவள்ளூர்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 3,279 சுய உதவிக் குழுக்களுக்கு 281.9 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் நலன் மற்றும் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள ஏழை, மிகவும் ஏழை மற்றும் நலிவுற்றோர் வகையைச் சார்ந்த அனைத்து குடும்பங்களில் உள்ள பெண்களை மகளிர் சுய உதவிக் குழுக்களாக ஒருங்கிணைந்து அவர்களுக்கு சுழல் நிதி ரூ.15 ஆயிரம் மற்றும் சமூக முதலீட்டு நிதி ரூ.1.50 லட்சம் மாநில அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதார உயர்வுக்கும், சுய தொழில் செய்வதற்கும் வங்கிக் கடன் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வழங்கப்படுகிறது. அதற்கான அடிப்படை கட்டமைப்புகளான காளான் வளர்ப்பு கூடம், பணிக் கூடங்கள் ஆகியன ஊரக வளர்ச்சித் துறை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் செய்து தரப்படுகின்றன.

இளைஞர் நலன் மேம்பட வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி மற்றும் சுய வேலை வாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலையின்மை நிலை இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கான திட்டங்களை வேலைவாய்ப்பு முகவர்கள், இளைஞர் திறன் திருவிழா போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

ஏழை பெண் விவசாயிகளைக் கொண்டு உற்பத்தியாளர்கள் குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் ரூ.2 லட்சம் கட்டமைப்பு நிதி வழங்கப்பட்டு வருகிறது. பண்ணை சாரா பெண் தொழில் முனைவோர் கண்டறியப்பட்டு 150 நபர்கள் கொண்ட குழு உருவாக்கப்பட்டு குழுவுக்கு தொழில் மேம்படுத்தும் வகையில் ரூ.50 லட்சம் மதிப்பில் சமுதாய மதிப்பில் தொழில் முதலீட்டு நிதி வழங்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 569 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.44.91 கோடி நிதி வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் மா.ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம், எம்எல்ஏக்கள் உத்திரமேரூர் க.சுந்தர், காஞ்சிபுரம் சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை ஆ.மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிகுழுவினரின் கடன் தள்ளுபடிக்கான சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி, அச்சிறுப்பாக்கம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக குறு,சிறு மற்றும் நடுத்த தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பங்கேற்றார்.

மேலும், வங்கியில் கடன் பெற்ற 1,124 மகளிர் சுய உதவி குழுக்களுக்கான ரூ.29.61 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடிக்கான சான்றுகளை குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடம் வழங்கினார். மேலும், தென்மேல்பாக்கம் நகர கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் 5 கிலோ மற்றும் 2 கிலோ எடைகொண்ட எரிவாயு சிலிண்டர் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், 21 பயனாளிகளுக்கு ரூ.44.33 லட்சம் மதிப்பில் கடனுதவிகளை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்செல்வி, மாவட்ட திட்ட இயக்குநர் செல்வகுமார், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 1,407 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.149.24 கோடி மதிப்பில் வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டன. இந்த நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார். நிகழ்ச்சிக்கு ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதார உயர்வுக்கும் சுய தொழில் செய்வதற்கும் வங்கிக் கடனாக ரூ.1 லட்சம் முதல்ரூ.20 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x