Published : 23 Dec 2022 07:56 PM
Last Updated : 23 Dec 2022 07:56 PM

கனமழை எச்சரிக்கை | முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? - பேரிடர் மேலாண் துறை விளக்கம் 

கோப்புப்படம்

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை கடற்கரையை ஒட்டி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதைத் தொடர்ந்து, கனமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தயார் என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் 29.10.2022 முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழைப் பெய்து வருகிறது. 1-10-2022 முதல் 22-12-2022 வரை 425 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவைக் (427.4 மி.மீ.) காட்டிலும் ஒரு விழுக்காடு குறைவு ஆகும்.

இந்திய வானிலை ஆய்வு மையம், தனது 23-12-2022 நாளிட்ட சிறப்பு வானிலை அறிவிக்கையில், தென் மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் நாகப்பட்டினத்திற்கு கிழக்கே 480 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 540 கி.மீ. தொலைவில் ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் இது மேற்கு தென்மேற்கு திசையில் குமரிக் கடல் பகுதியை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, 25.12.2022 தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைப் பெய்யக் கூடும்.

26.12.2022 தேனி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைப் பெய்யக் கூடும்.

மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக,25.12.2022 தமிழக கடற்கரை, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சீரற்ற வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மேலும் மணிக்கு 65 கி.மீ. வேகம் வரையிலான பலத்த காற்று வீசக்கூடும். கடல் மிகுந்த கொந்தளிப்புடன் காணப்படும்.

26.12.2022 தென் தமிழக கடற்கரை, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சீரற்ற வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மேலும் மணிக்கு 60 கி.மீ. வேகம் வரையிலான பலத்த காற்று வீசக்கூடும். கடல் மிகுந்த கொந்தளிப்புடன் காணப்படும்.

27.12.2022 இலட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மேலும் மணிக்கு 60 கி.மீ. வேகம் வரையிலான பலத்த காற்று வீசக்கூடும். கடல் மிகுந்த கொந்தளிப்புடன் காணப்படும்.

சீரற்ற வானிலை மற்றும் கடல் கொந்தளிப்பின் காரணமாக மீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய தமிழக கடற்கரை பகுதி, இலங்கை கடற்பகுதி, மன்னார் வளைகுடா, குமரிக்கடல், லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் தங்களது மீன் பிடி படகுகள், வல்லம் மற்றும் மீன் வலைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழக முதல்வரின் அறிவுரையின் பேரில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் பலத்த காற்றுடன் பெய்யும் கனமழையை எதிர்கொள்ள பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  • கனமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களுக்கு கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிருவாக ஆணையர் அவர்களது கடித எண். இஇ1 (4) / 558 / 2022, நாள்: 17.12.2022 -ன் படி அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
  • கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ள 381 இயந்திர படகுகளில் 305 இயந்திர படகுகள் மேற்கு கடற்கரையிலும், சென்னை மற்றும் கடலூரை சேர்ந்த 76 மீன்பிடி படகுகள் கிழக்கு கடற்கரை பகுதியிலும் உள்ளன. இந்த மீனவர்களுக்கு VHF, Sat Phones, Navtex, Navic மூலம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
  • பலத்த காற்று கடல் கொந்தளிப்பு மற்றும் கனமழை குறித்த முன்னெச்சரிக்கை தகவலை மீனவர்கள் மற்றும் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஒருங்கிணைந்த பொதுவான எச்சரிக்கை நெறிமுறை அமைப்பு (CAP) மூலமாக 33 இலட்சம் கைப்பேசிகளுக்கு குறுஞ்செய்தி எச்சரிக்கையும், முன்னெச்சரிக்கை தகவல் அமைப்பு (EWS) ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
  • மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புயை பகுதிகளில் முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  • மாநிலத்தில் உள்ள 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5,093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.
  • பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க பல் துறை மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  • அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உபரி நீர் வெளியேற்றும் போது பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்க மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  • மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்குகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x