Published : 23 Dec 2022 07:12 PM
Last Updated : 23 Dec 2022 07:12 PM

பெற்றோர் கோரிக்கை நிராகரிப்பு: கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போனை போலீஸிடம் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி | கோப்புப்படம்

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை காவல் துறைக்கு பதிலாக அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க அனுமதி கோரிய மாணவியின் பெற்றோர் தரப்பு கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் மற்றும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளைக் கண்காணித்து வரும் சென்னை உயர் நீதிமன்றம், மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணைக்காக காவல் துறையிடம் ஒப்படைக்க மாணவியின் பெற்றோருக்கு உத்தரவிட்டிருந்தது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, "மாணவி செல்போன் எதுவும் பயன்படுத்தவில்லை" என மாணவியின் தந்தை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, "மாணவியிடம் செல்போன் இருந்தும் அதனை மறைத்தால் அது சட்டப்படி தவறு. அதற்காக பெற்றோரை விசாரிக்க உத்தரவிட நேரிடும்” என எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதி சந்திரசேகரன் முன்பு மாணவியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி, "மாணவியின் செல்போனை காவல் துறையிடம் ஒப்படைக்க மாட்டோம். அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க தயாராக இருக்கிறோம். எனவே இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும்" என்று முறையிட்டார்.

செல்போனை பெற்றுக்கொள்ள மறுத்த அரசு வழக்கறிஞர் சந்தோஷ், செல்போனை புலன் விசாரணை நடத்தி வரும் காவல் துறையிடம்தான் ஒப்படைக்க வேண்டும்" என திட்டவட்டமாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "வழக்கை புலன் விசாரணை செய்து வரும் காவல் துறையிடம் செல்போனை வழங்கினால் உடனடியாக அதனை தடயவியல் சோதனைக்கு அனுப்பி அறிக்கை பெற முடியும்” எனக் கூறி பெற்றோர் தரப்பு கோரிக்கையை நிராகரித்தார். பின்னர், செல்போனை தாமதிக்காமல் காவல் துறையினரிடம் ஒப்படைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x