Published : 18 Dec 2022 09:09 PM
Last Updated : 18 Dec 2022 09:09 PM

ஐடி துறையில் அதிகரிக்கும் வேலை இழப்புகளை தடுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் | கோப்புப்படம்

மதுரை: ‘‘தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிகரிக்கும் வேலை இழப்புகளை தடுத்து நிறுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது. இளைய சமுதாயத்தினர் தற்போது தகவல் தொழில்நுட்பத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள். இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் இந்த துறை 227 பில்லியன் டாலர் வளர்ச்சியை கண்டுள்ளதாகவும், இந்த வளர்ச்சி மூலம் நடப்பு நிதியாண்டில் 0.45 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும் நமக்கு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.

அதே சமயம் ஐடி நிறுவனங்களிலே வேலை இழப்பும் ஒரு புறம் நடந்து கொண்டே இருக்கிறது. ட்விட்டர், மெட்டா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் செலவை குறைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஊழியர்களை சமீபத்தில் பணி நீக்கம் செய்திருக்கிற செய்தி நமக்கு கவலை அளிப்பதாக உள்ளது.

தற்காலிக பணிநீக்கம் என்பதை விட, நிரந்தர பணி நீக்கம் தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது .இந்த நிரந்தர பணி நீக்கதற்கான வரையறையுடன் ஒரு சட்டம் இந்தியாவிலேயே இருக்கிறது.

தகவல் தொழில்நுட்பத்தின் நிறுவனத்தில் ஏற்படும் இழப்பை காரணம் காட்டி, அந்த அலுவலர்களை அந்த நிறுவனம் பணி நீக்கம் நிறுவனத்தில் ஏற்படும் இழப்பை காரணம் காட்டி அவர்களை நீக்குவதற்கு வழிவகை இருக்கிறது. நிரந்தர பணி நீக்கத்தை அந்த நிறுவனங்கள் செய்ய முடியும் என அந்த சட்டம் தெரிவிக்கிறது.

ஆனால் பல நூறு கோடி ரூபாய் லாபகரமாக இயங்கி வரும் நிறுவனங்கள் கூட, அடுத்த சில ஆண்டுகளில் ஏற்படக்கூடிய பொருளாதார மந்த நிலையிலேயே கருத்திலே கொண்டும், தங்கள் லாபத்தை மேலும் அதிகரிக்கவும் சட்டத்துக்கு மாறாக தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் மிரட்டி, அவர்களை ராஜினாமா செய்ய வலியுறுத்துவதாகவும், நமக்கு இன்றைக்கு செய்திகள் பரவலாக பேசப்பட்டு
வருகிறது.

சென்னையில் தற்போது சில முன்னணி ஐடி நிறுவனங்கள் இதுபோல, அதிக அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. ஊழியர்களை வேலையில் இருந்து விடுவிப்பதை விட, ஊழியர்களே நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்து கொண்டால் சட்டபூர்வமான எதிர்ப்புகள் வராது என ஐடி நிறுவனங்கள் கருதுகின்ற காரணத்தினாலே, மிகப்பெரிய அளவிலே நடக்கும் இது போன்ற வேலை இழப்புகள் இந்த அரசின் கவனத்திற்கு வந்திருக்கிறதா?

தகவல் தொழில்நுட்பத் துறையில் 30 சதவீதத்திற்கு மேலே வேலை இழப்பு ஏற்படுவதை, தமிழக அரசு கவனத்தில் எடுத்து இதற்கான நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x