Published : 18 Dec 2022 04:20 AM
Last Updated : 18 Dec 2022 04:20 AM

ஆவின் நெய் விலை உயர்வைத் தொடர்ந்து வெண்ணெய் விலையும் உயர்வு: திரும்பப் பெற கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: கடந்த ஓராண்டில் ஆவின் நெய் விலை 3-வது முறையாக நேற்று முன்தினம் உயர்த்தப்பட்டு, லிட்டர் ரூ.680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஆவின் வெண்ணெய் விலையும் நேற்று உயர்த்தப்பட்டது. 500 கிராம் சமையல் வெண்ணெய் ரூ.10 உயர்த்தப்பட்டு ரூ.260 ஆகவும், 100 கிராம் வெண்ணெய் ரூ.52-ல் இருந்து ரூ.55 ஆகவும் உயர்த்தப்பட்டது. இதேபோல, 500 கிராம் உப்பு வெண்ணெய் ரூ.255-ல் இருந்து ரூ.265 ஆகவும், 100 கிராம் உப்பு வெண்ணெய் ரூ.52-ல் இருந்து ரூ.55 ஆகவும் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

இந்த விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விலை உயர்வைத் திரும்பப் பெறுமாறு பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: ஆவின் நெய் விலையை 9 மாதங்களில் 3 முறை உயர்த்தி ஏழை, நடுத்தர மக்களை திமுக அரசு வஞ்சித்துள்ளது. தற்போது வெண்ணெய் விலையையும் கிலோவுக்கு ரூ.20 உயர்த்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.

இதேபோல, பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், நெய், வெண்ணெய் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், விலை உயர்வைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x