Last Updated : 11 Nov, 2022 08:39 PM

 

Published : 11 Nov 2022 08:39 PM
Last Updated : 11 Nov 2022 08:39 PM

புதுச்சேரியில் கடல் சீற்றத்தில் அடித்துச் செல்லப்பட்ட 2 குடிசை வீடுகள், 5 தென்னை மரங்கள்

கடல் சீற்றத்தால் சாய்ந்த தென்னை மரங்கள்

புதுச்சேரி: கடல் சீற்றத்தால் பல அடி உயரத்துக்கு அலைகள் எழுகின்றன. பல கிராமங்களில் கடலரிப்பு அதிகரித்துள்ளது. தூண்டில் வளைவு இல்லாததால் பிள்ளைச்சாவடியில் 2 வீடுகள், 5 தென்னை மரங்கள் கடலில் அடித்து செல்லப்பட்டன. ஆளும் அரசின் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக எம்எல்ஏக்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில் முதல்வர் ரங்கசாமி காரில் சாப்பிட்டப்படியே மழை பாதிப்புகளை பார்த்தார்.

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் புதுச்சேரியில் கனமழை நேற்று இரவு முதல் பொழிந்து வருகிறது. தொடர்மழையால் புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று காலை 8.30 வரையிலான 24 மணி நேரத்தில் 6.7 செ.மீ மழைபதிவானது. தொடர்மழையால் பாவாணர் நகர், ரெயின்போ நகர், உட்பட சில இடங்களில் மட்டும் மழைநீர் தேங்கியது. ரெயின்போ நகரில் சில வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லக் கூடாது என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.

கடலில் நிலவும் சீற்றம் மற்றும் கடலில் வீசும் காற்றுவேகமும் அதிகளவில் இருந்தது. ஏற்கனவே வெளிமாநில மீன்களை புதுவையில் விற்க ஏஜெண்டுகளுக்கு அனுமதி அளித்ததை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் தொடர்ந்து பல வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீனவர்கள் பல வாரங்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பாக துறைமுகத்தில் நிறுத்தியே வைத்துள்ளனர். சிறிய படகில் சென்றவர்கள் கரை திரும்பி பாதுகாப்பான இடங்களில் நிறுத்தியுள்ளனர்.

கனமழை மற்றும் காற்றழுத்தம் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக தூண்டில் வளைவு இல்லாததால் புதுச்சேரி கடலோர கிராமங்களில் கடல் அரிப்பு அதிகளவில் இருந்தது. தற்போது கடல் சீற்றத்தால் பல கிராமங்களில் கடல் அரிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக பிள்ளைச்சாவடி கிராமத்தில் தூண்டில் வளைவும் அமைக்காததால் ஏற்கெனவே இரு சாலைகள்,நூற்றுக்கணகான வீடுகள், தென்னை மரங்கள் அடித்து செல்லப்பட்டன.

மக்களின் தொடர் போராட்டத்தால் இங்கு கல் கொட்டும் பணி நடந்தது. 300 அடி தொலைவில் கல் கொட்டி சாலை அமைக்கும் சூழலில் காலை முதல் அலைசீற்றத்தால் அவை கடல்நீர் சூழ்ந்துள்ளது. கடல் சீற்றத்தால் மேலும் 2 குடிசை வீடுகளும் 5 தென்னை மரங்களும் வேறோடு சாய்ந்து அடித்து செல்லப்பட்டன.

சாலையோர மின் கம்பங்கள், குடியிருப்பு பகுதியில் இருந்த குடிநீர் குழாய்ககளும் அண்மையில் அடித்துச் செல்லப்பட்டன. புதுச்சேரி அரசு சார்பில் அங்கு கட்டித்தந்த மீன்வலை காப்பகத்தின் தரைத்தலத்திலும் தற்போது தண்ணீர் சூழ்ந்துள்ளது. விரைவில் அந்த கட்டடம் விழுந்துவிடும் நிலையில் உள்ளதாக மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநாடு பயணத்தால் காரில் அமர்ந்து உணவு சாப்பிட்டபடியே ஆய்வு செய்த முதல்வர் தற்போது ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக எம்எல்ஏக்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளனர். இச்சூழலில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி காரில் பயணித்தப்படி ஆய்வினை மேற்கொண்டார்.

கடந்த ஆண்டு கனமழையால் பாதிக்கப்பட்ட முக்கிய வீதிகள் மற்றும் சந்திப்புகளில் மழை தண்ணீர் தேங்கியுள்ளதா என்பதை பார்த்தார். இம்முறை பல பகுதிகளில் தொடர்மழையிலும் வெள்ளநீர் தேங்காததை உறுதி செய்தார். நகரில் பல பகுதிகளில் காரில் உணவு சாப்பிடப்படியே ஆய்வு செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x