Published : 07 Nov 2022 01:32 PM
Last Updated : 07 Nov 2022 01:32 PM

10% இட ஒதுக்கீடு தீர்ப்பு | “நூற்றாண்டு கால சமூக நீதி போராட்டத்தில் ஒரு பின்னடைவு” - மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் | கோப்புப் படம்

சென்னை: “பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு” என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று (நவ.7) தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்காக 2019-ம் ஆண்டு மத்திய பாஐக அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறை சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமையும் என்ற அடிப்படையில், இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்து நடத்தி வந்தது. இந்த வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு, சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டியுள்ளது.

எனினும், தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, சமூக நீதிக்கு எதிரானதான முன்னேறிய வகுப்பினருக்கான இந்த இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிரான நமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும்.

சமூக நீதியைக் காக்க முதல் அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வைத்த தமிழக மண்ணிலிருந்து, சமூக நீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்த அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x