Published : 29 Oct 2022 05:23 AM
Last Updated : 29 Oct 2022 05:23 AM

முபின் வீட்டிலிருந்து 109 பொருட்கள் பறிமுதல் - கோவை கார் சிலிண்டர் வெடிப்பு குறித்த என்ஐஏ-வின் எஃப்ஐஆரில் தகவல்

சென்னை: கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பில் இறந்த முபின் வீட்டிலிருந்து 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை என்ஐஏ பதிவு செய்திருக்கும் முதல் தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆர்) குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலானவை வெடிகுண்டு மற்றும் வெடிபொருட்கள் தயாரிக்க பயன்படுபவை என போலீஸார் தெரிவித்தனர்.

கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23-ம் தேதி அதிகாலை 4 மணியளவில் கார் ஒன்று வெடித்து சிதறியது. அந்தக் காரை ஒட்டி வந்தஜமேஷா முபின் என்ற இளைஞர் உயிரிழந்தார். இந்த வழக்கை உக்கடம் போலீஸார் விசாரித்தனர். சம்பவம் நடந்த இடத்திலிருந்து ஆணிகள், பால்ரஸ்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், உயிரிழந்த முபின் வீட்டிலிருந்து வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் வெடி மருந்துகளும் சிக்கின. இதையடுத்து இந்த வழக்கு என்ஐஏ-வுக்கு (தேசிய புலனாய்வு முகமை) மாற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சென்னை என்ஐஏ வழக்குப் பதிவு செய்துள்ளது. அதன் முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எஃப்ஐஆர் அறிக்கை விவரம்: கடந்த 23.10.2022 அன்று உக்கடம்பகுதியில் உள்ள ஈசுவரன் கோயில் தெருவில் டிஎன் 01 எஃப் 6163 என்றபதிவு எண் கொண்ட மாருதி கார்அதிகாலை 4 மணியளவில் சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது.காருக்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. இந்தச் சம்பவத்தில் கோயில் பெயர் பலகை, அந்தப் பகுதியிலிருந்த கடை ஆகியவை சேதமடைந்தன. விசாரணையில் உயிரிழந்தவர் உக்கடம், கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்பது தெரியவந்தது. அவரது வீட்டிலிருந்து 109பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதில் பொட்டாசியம் நைட்ரேட், பிளாக் பவுடர், தீப்பெட்டி, இரண்டு மீட்டர் நீளமுள்ள கிராக்கர் ஃபீஸ்,நைட்ரோ க்ளைரசின், சிகப்பு பாஸ்பரஸ், பிஇடிஎன் பவுடர் (பென்டா எரித்திரிடால் டிரை நைட்ரேட்), அலுமினியம் பவுடர், ஓஎக்ஸ்ஒய் 99, ஆக்ஸிஜன் சிலிண்டர், சல்ஃபர் பவுடர், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளேடு, கண்ணாடிகள், 9 வாட்ஸ் பேக்டரி, 9 வாட்ஸ் பேட்டரி கிளிப், வயர், ஆணிகள், சுவிட்ச், சிலிண்டர், ரெகுலெட்டர், டேப், கையுறைகள், ஜிகாத் வரிகள்கொண்ட நோட்டுகள் உள்ளிட்ட 109பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக கோயிலின் பூசாரி எஸ்.சுந்தரேசன் புகாரளித்திருக்கிறார். இந்த வழக்கு முதலில் சந்தேக மரணம் என்றும் வெடிபொருட்கள் தடைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் உக்கடம் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதையடுத்து மத்திய அரசின் உத்தரவின்படி சென்னை என்ஐஏ இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது.

வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை சென்னை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எஃப்ஐஆரில் கார் சிலிண்டர் வெடித்தது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

சென்னையில் என்ஐஏ அலுவலகம் தொடங்கப்பட்டு. கோவை கார்சிலிண்டர் வெடிப்பு வழக்குதான்முதல் வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, கார் சிலிண்டர் வெடிப்பில் உயிரிழந்த முபின் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் பெரும்பாலானவை வெடிகுண்டு மற்றும் வெடிபொருட்கள் தயாரிக்க பயன்படுபவை என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x